தனது சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி போட தடுப்பூசி மையங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு தலா $15 மதிப்புள்ள இரு பயணப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என ‘கோஜெக் சிங்கப்பூர்’ தனியார் வாடகை டாக்சி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மையங்களுக்குச் செல்லவும் அங்கிருந்து திரும்பவும் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி தேவைப்படுவோர்க்கு உதவி கிடைப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கம் என்று கோஜெக் நிறுவனம் ஓர் அறிக்கை வாயிலாகக் கூறி இருக்கிறது.
கோஜெக் பயனாளர்களின் கணக்குகளில் அந்த இரு பயணப் பற்றுச்சீட்டுகள் தானாகவே சேர்க்கப்பட்டுவிடும். அவற்றை இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை பயன்படுத்த முடியும்.
அந்தப் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, தங்களது தடுப்பூசி மையம், பலதுறை மருந்தகம் அல்லது மருந்தகத்திற்குச் செல்ல அல்லது அங்கிருந்து திரும்ப மானியக் கட்டணத்தில் கோஜெக் டாக்சியை முன்பதிவு செய்யலாம். வாரத்தின் எந்த நாளிலும் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த இயலும்.
நேற்று முதல் வரும் 31ஆம் தேதிக்குள் கோஜெக் செயலியைத் தரவிறக்கம் செய்து, பதிவு செய்யும் புதிய பயனாளர்களும் தங்களது கோஜெக் கணக்குகள் வழியாக அப்பற்றுச்சீட்டுகளைப் பெறுவர்.
இம்மாதத் தொடக்கத்தில், டான் டோக் செங் மருத்துவமனையுடன் கோஜெக் நிறுவனம் ஒரு பங்காளித்துவத்தைச் செய்துகொண்டது. அதன்படி, முன்களத்தில் இருந்து பணியாற்றி, சிங்கப்பூரை நலமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ‘கோஹீரோஸ்’ எனும் திட்டத்தின்மூலம் அந்த மருத்துவமனைப் பணியாளர்களுக்குப் பயணப் பற்றுச்சீட்டுகளை கோஜெக் வழங்கும்.
“கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி ஒரு முக்கியமான பாதுகாப்பு அடுக்கு. தங்களது முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்கள் ஓட்டுநர்களை ஊக்குவிப்பதுபோல, எங்களது சேவையைப் பயன்படுத்தும் பயணிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள எளிதாகச் சென்று வர உதவ விரும்புகிறோம்,” என்று கோஜெக் பொது மேலாளர் லியன் சூங் லுவென் கூறியிருக்கிறார்.