கொவிட்-19 தாக்கம்: வேலை தேடுவதில் சிரமம்
இந்த ஆண்டு பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமைவது சற்று கடினமாகவே உள்ளது. அதிலும், கொவிட்-19 சூழலில் வேலை வாய்ப்புகளைத் தேடும் உத்திகளை மாற்ற வேண்டியிருப்பதாக மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். சிலர் படித்த துறையை விட்டு வேறு துறைகளுக்கு மாறியுள்ளனர்.
"கொவிட்-19 கிறுமித்தொற்றினால் ஏற்பட்ட தேவை காரணமாக உயிர் மருந்தியல், உயிர்தொழில்நுட்பத் துறைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன," என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உயிர் பொறியியல் பட்டம் பெற்ற ஸாந்தினி, 20.
"ஆனாலும் இத்துறையில் வேலை பெறுவதில் நான் இன்னும் சிரமப்படுகிறேன். நிறுவனங்கள் பெரும்பாலும் விரும்புவது அனுபவம் உள்ளவர்களை. புதிய பட்டதாரியான எனக்கு, அத்தகைய வேலைகளுக்குத் தேவையான அனுபவம் இல்லை."
"அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பயிற்சித் திட்ட வாய்ப்புகளைப் பற்றி தேடித் தெரிந்துகொண்டு இத்துறையில் நுழைவதற்கும் முழு நேர வேலைக்குத் தேவையான அனுபவத்தைப் பெறு வதற்கும் தகுந்த வாய்ப்புகளைத் தேடி வருகிறேன்," என்றார் ஸாந்தினி.
சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்கள்
நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரியில் மருந்தியல் ரசாயனத் துறையில் பட்டயம் பெற்ற எல்லப்பன் காயத்திரிதேவிக்கு ரசாயனத்தில் வேலை செய்ய முடியாத நிலை.
ஆய்வுக்கூடங்களில் ஏற்படும் அதிக ரசாயன வெளியேற்றத்தால் அவருக்கு ஒவ்வாமை உண்டானது. அதனால் வேறு துறைக்கு மாற வேண்டிய கட்டாயம். நிர்வாகத் துறையைச் சார்ந்த வேலை வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார்.
இச்சமயத்தில்தான் எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டம் பற்றி அறிந்த அவர், நிறுவனச் சூழலில் புதிய திறன் களைக் கற்கவும் தொழில் அனுபவங் களைப் பெறவும் இத்திட்டத்தில் சேர முடிவெடுத்தார்.
சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தில் நிறுவனத்துக்கான பகிரப்பட்ட சேவைகள் பிரிவில் மூத்த மேலாண்மை சேவை உதவியாளராகப் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.
மனித இயந்திரவியல் முறையைப் பயன்படுத்தி வேலையில் தானியக்க செயல்முறைகளை உருவாக்குவது பற்றி யும் மனிதவளத் தரவுகளையும் அவற்றின் போக்குகளையும் பகுப்பாய்வு செய்வதும் இந்த வேலையின் பொறுப்புகள். ஆறு மாதப் பயிற்சிக்குப் பின்னர் நிரந்தரப் பணி கிடைத்தது.
படித்த துறையிலிருந்து வேறு தொழிலுக்கு மாறுவது பற்றி இளையர்களுக்கு காயத்திரி கூறும் ஆலோசனை இதுதான்: "திறந்த மனதுடன் இருப்பது முக்கியம். பள்ளியில் நீங்கள் படிக்காத புதிய துறைகளைக் கற்க பயப்பட வேண்டாம். தொடர்ந்து கற்று, புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்."
முன்கூட்டியே திட்டமிடுபவர்கள்
சிலர் பட்டப்படிப்பை முடிக்கும் முன்னரே வேலை தேடத் தொடங்கிவிட்டனர். ஜூலை மாதத்தில் விண்கலப் பொறியியல், வணிகத் துறைகளில் பட்டத்தைப் பெறுவார் எம்பிரி ரிட்டல் விண்கலப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சஹாரிகா கமலக்கண்னன், 25.
"வழக்கமான சூழலில் விமானப் போக்குவரத்து துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருக்கும். ஆனால் கிறுமித்தொற்று பாதிப்பினால் தற்சமயம் இத்துறையில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. கொவிட்-19 பரவல் காரணமாக பல நிறுவனங்கள் அடைந்த இழப்புகளால் புதிய வேலை வாய்ப்புகளின் குறைபாடு அதிகரித்துள்ளது. இதனால் நான் விமானப் போக்குவரத்து துறையைத் தவிர வேறு துறைகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்கிறேன்," என்றார் அவர்.
கொவிட்-19 சூழலில் சில நிறுவனங் கள் இணையவழி நேர்காணல்களை நடத்துகின்றன. ஆனால் அவற்றைவிட நேரடி நேர்காணல்களே தங்களின் தொடர்புத் திறன்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும் என்கின்றனர் சஹாரிகா போன்றவர்கள்.
ஆனால் மெ. ஷண்முகம், 25, சென்றுள்ள அனைத்து நேர்காணல்களும் இணையத்தில் நடத்தப்பட்டுள்ளன. இணையவழி நேர்காணல்கள் தொழில்நுட்பம் சார்ந்த பதில்களை மன உளைச்சல் இன்றி அளிக்க உதவி செய்வதாக அவர் கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு கணினியியல் பட்டம் பெற்ற ஷண்முகம், தொற்றுநோய் காலத்திலும் கணினியியல் துறையில் பல வேலை வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார்.
"இணையத்தளங்கள் மூலம் நிறைய நிறுவனங்கள் வர்த்தகத்தைப் பெருக்க முயன்று வருகின்றன. அவர்களுக்கு பல ஊழியர்கள் தேவை. மற்ற தொழில் களுடன் ஒப்பிடும்போது கணினியியல் துறையில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது எளிது. சில நேர் காணல்களில் கலந்து கொண்டேன். அவற்றில் ஒரு வேலைக்கான இறுதிச் சுற்றில் உள்ளேன். வாய்ப்பைப் பெறுவேன் என நம்புகிறேன்," என்றார் ஷண்முகம்.
செய்தி: ஆர்த்தி சிவராஜன்