இம்மாதம் 16ஆம் தேதியில் இருந்து கார்டியன், யூனிட்டி, வாட்சன்ஸ் ஆகிய மருந்தகங்களில் கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி விற்பனைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
"அதிகமான நடவடிக்கைகளை நாம் மீண்டும் தொடங்க விரும்புவதால், கொரோனா பரிசோதனையை விரைந்தும் எளிதிலும் அனைவர்க்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது," என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
அனைவர்க்கும் போதுமான அளவில் விநியோகம் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, தொடக்கத்தில் ஒருவர்க்கு அதிகபட்சம் 10 ஆன்டிஜன் விரைவுச் சோதனை (ஏஆர்டி) கருவிகள் மட்டுமே விற்கப்படும்.
படிப்படியாக அவை அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
'ஏஆர்டி' பரிசோதனைக் கருவியை எளிதாகவும் சுயமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் அதன்மூலம் 20 நிமிடங்களுக்குள் முடிவைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
"இந்த 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவி, நமது ஒட்டுமொத்த கண்காணிப்பு உத்தியை முழுமையாக்கும்.
"இந்த விரைவான, எளிதில் பயன்படுத்தக்கூடிய பரிசோதனைக் கருவி, குறிப்பாக தீவிர மூச்சுத்தொற்று அறிகுறி இல்லாத, அதே நேரத்தில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் எனக் கவலைப்படுவோரிடத்தில் கொரோனா பாதிப்பை விரைந்து கண்டறிய உதவும்," என்று சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் இயக்குநரும் இணைப் பேராசிரியருமான திரு கென்னத் மாக் கூறினார்.
எடுத்துக்காட்டாக, கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் சென்று வந்த இடத்திற்குச் சென்று வந்த மற்றவர்களுக்கு இந்தச் சுயபரிசோதனைக் கருவி உதவும்.
"ஒருவரை கொரோனா தொற்றியுள்ளதாக 'ஏஆர்டி' சுயபரிசோதனைக் கருவி முடிவு காட்டினால், அவர் உடனடியாக பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகத்திற்குச் சென்று 'பிசிஆர்' உறுதிச் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
"அதன்பின் பிசிஆர் சோதனையில் தமக்குத் 'தொற்று இல்லை' என முடிவு வரும்வரை அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
அதேபோல, 'ஏஆர்டி' சுயபரிசோதனையில் 'தொற்று இல்லை' என முடிவு வந்தாலும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தீவிர மூச்சுத்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்போர், 'ஏஆர்டி' சுயபரிசோதனைக் கருவியை நம்பி இராமல் முழுமையான சோதனைக்காகவும் பிசிஆர் சோதனைக்காகவும் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.