நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரி விரிவுரையாளர் டான் பூன் லீ, வகுப்பில் இன, சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொண்டதாக அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் புகார் கூறி இருக்கிறார்கள்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் 2017 ஜூலையில், அந்த விரிவுரையாளரிடம் தான் படித்தபோது தான் ஒரு முஸ்லிம் என்பதை வகுப்பில் குறிப்பிட்டு, இஸ்லாம் பற்றி அவமதிப்பான விவாதம் ஒன்றை விரிவுரையாளர் கிளப்பிவிட்டதாக அத்தகைய மாணவர்களில் ஒருவரான நூருல் ஃபாத்திமா இஸ்கந்தர், 22, என்பவர் புதன்கிழமை இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.
இஸ்லாம் பற்றிய இணையத் தளங்களை அந்த விரிவுரையாளர் தொடங்கியதும் திருக்குரான் போதனைகளில் சிலவற்றைத் தான் ஏற்றுக்கொள்ளாதது ஏன் என்பதை அவற்றில் அவர் விளக்கியதும் தனக்கு நினைவில் இருப்பதாக குமாரி நூருல் ஃபாத்திமா இஸ்கந்தர் தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
தன்னை முஸ்லிம் என்று குறிப்பிட்டு அந்த அம்சங்கள் பற்றி விவாதிக்க அவர் முயன்றார் என்றும் முன்னாள் மாணவி கூறினார்.
அந்த விரிவுரையாளர்தான் மதிப்பெண்களை அளித்து தான் உட்பட தன் வகுப்பு மாணவர்களைத் தரப்படுத்துபவர் என்பதால் பதில் எதையும் வெளியிடாமல் இருப்பதே விவேகமானது என்று தான் முடிவு செய்ததாகவும் அந்த மாணவி தெரிவித்தார். பிறகு அவர் தான் படிக்கும் கல்லூரிக்கு அது பற்றி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார்.
ஆனால் அதற்குப் பதில் இல்லை என்றாரவர்.
பிறகு அந்தச் சம்பவம் பற்றி இன்ஸ்டகிராமில் அவர் பதிவேற்றி னார். அந்த விரிவுரையாளரின் மேலும் பல தளங்கள் பற்றிய தகவல்கள் இதர மாணவர்கள் மூலம் தன் கவனத்திற்கு வந்ததாக வும் அந்த மாணவி தெரிவித்தார்.
ஒருநேரத்தில் அந்த விரிவுரையாளர் வகுப்பில் கிறிஸ்துவ சமயம் பற்றி இகழ்ச்சியான கருத்துகளை தெரிவித்ததாக இன்ஸ்டகிராம் புழங்கி ஒருவர் தெரிவித்தார்.
தலையை மூடும் துணியை அகற்றும்படி அந்த விரிவுரையாளர் தன்னிடம் கூறியதாக வேறு ஒரு மாணவி தெரிவித்தார்.
இதனிடையே, இதுபற்றி அந்த விரிவுரையாளரிடம் கருத்து கேட்டபோது, இப்போதைக்கு கருத்து எதையும் கூற முடியாது என்று அவர் மறுத்துவிட்டதாகவும் இருந்தாலும் நூருல் ஃபாத்திமா இஸ்கந்தர் முன்பு தன்னிடம் படித்தவர் என்று தனக்கு நினைவிருப்பதாக அவர் கூறியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் சனிக்கிழமை இரவில் டேவ் பிரகாஷ், 26, அவரின் காதலி ஜாக்குலின் ஹோ 27, என்ற இரண்டு பேரிடம் இனவாதக் கருத்துகளை விரிவுரையாளர் டான் தெரிவிப்பதை ஒரு காணொளி காட்டியது. இதை அடுத்து இப்போது போலிஸ் விரிவுரையாளரை விசாரித்து வருகிறது.
பாடபோதனை பணிகளில் இருந்து விரிவுரையாளரை தற்காலிகமாக நீக்கி இருக்கும் அக்கல்லூரியும் அவரை விசாரிக்கிறது.