புக்கிட் பாத்தோக்கில் நேற்று முன்தினம் காலை நிகழ்ந்த தீவிபத்தின் போது ஆடவர் ஒருவர் தமது மனைவியுடன் ஓடிச்சென்று உதவினார்.
முகம்மது நசிருதீன் முகம்மது காலித், 32, எனப்படும் அவர், தமது இரு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 3ல் தமது புளோக் 238ன் மாடியில் அண்டை வீட்டிலிருந்து புகையும் கருகிய வாடையும் வருவதைக் கண்டு அந்த வீட்டை நோக்கி ஓடினார்.
வீட்டினுள் ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதைக் கண்ட அவர் சற்றும் தாமதிக்காமல் சன்னல் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். அவரது மனைவி தீயணைப்புச் சாதனத்தை தமது வீட்டிலிருந்து எடுத்து வர ஓடினார்.
சம்பவம் குறித்து ‘த நியூ பேப்பர்’ செய்தித்தாளிடம் நசிருதீன் விவரித்தார். “ஒரே கரும்புகையாக இருந்தது. அந்த ஆடவரை எப்படியோ சமாளித்து வெளியே இழுத்து பொதுத் தாழ்வாரத்திற்குக் கொண்டு வந்தேன். தட்டி எழுப்பியதும் அவர் எழுந்துவிட்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வரும் வரை பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைத்தார்கள்,” என்றார்.
இவரும் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 37 வயது ஆடவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த வீட்டில் அவர் வாடகைக்குத் தங்கி இருந்ததாகத் தெரிய வந்தது. தீ பற்றிய விதம் குறித்த விசாரணை தொடருகிறது.