புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் சிலவற்றில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கான கட்டாய கொவிட்-19 பரிசோதனை நேற்றுக் காலை 9 மணிக்குத் தொடங்கியது.
ஹெண்டர்சன் கிரசெண்ட் புளோக் 103ல் உள்ள மூன்று குடும்பங்களின் நான்கு குடியிருப்பாளர்களுக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு அறிவித்ததை அடுத்து நேற்றைய கிருமித்தொற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
ஹெண்டர்சன் கிரசெண்ட், புளோக் 104Bல் உள்ள கூடாரத்துக்கு நேற்றுக் காலை வந்த 71 வயதாகும் தையல் தொழில் உதவியாளரான திருவாட்டி டான் பூன் ஹுவே, "பரிசோதனையின் போது சற்று அசௌகரியமாக இருந்தாலும் இது நமக்கும் மற்றவர்களுக்கும் முக்கியமான நடவடிக்கை. நானும் எனது அண்டை வீட்டுக்காரர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளோம்," என்றார்.
நேற்று முன்தினம் காலை அவர் இலவசமாக வழங்கப்பட்ட ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவியை அதே கூடாரத்தில் பெற்றுக்கொண்டார். ரெட்ஹில், புக்கிட் மேரா வாசிகளுக்கு கிருமிப் பரவல் தாக்காமல் இருக்க, அவர்களுக்கு அந்த சுயப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன.
ஹெண்டர்சன் கிரசெண்ட், புளோக் 103ல் உள்ள குடியிருப்பாளர்களுடன் இம்மாதம் 7ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலான காலத்தில் கலந்துறவாடிய மற்றவர்களும் கொவிட்-19 பரிசோதனை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் இன்று வட்டார பரிசோதனை நிலையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் அல்லது ஹெண்டர்சன் கிரசெண்ட், புளோக் 104Bல் உள்ள கூடாரத்துக்கு நேரடியாகச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம்.
ஹெண்டர்சன் கிரசெண்ட்டில்இருந்து 12 நிமிடம் நடந்தால் லெங்கோக் பாருவை அடைந்துவிடலாம். அங்குள்ள புளோக் 53 வெற்றுத் தளத்தில் நேற்றுக் காலை முதல், கொவிட்-19 பரிசோதனை நடந்தது. அதைப் பார்வையிட்ட தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சுவா, அங்குள்ள மூன்று புளோக்குகளில் சுமார் 1,700 பேர் வசிக்கிறார்கள் என்றார்.
"தங்கள் பரிசோதனையை முடித்துக்கொண்ட கடைக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை வழக்கம்போல் தொடரலாம்," என்றும் கூறினார் திரு சுவா.
இதற்கிடையே, ஹெண்டர்சன் கிரசெண்ட் புளோக் 105ல் கடந்்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த பரிசோதனையில் ஏழு பேருக்குக் கிருமித்தொற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஓய்வுபெற்ற 70 வயது முதியவர், 32 வயது பகுதிநேர விநியோக ஊழியர், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் ஆகியோரும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு நேற்று கூறியது.