உடற்குறையுள்ளவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் தேவை

உடற்குறையுள்ளவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் தேவை

2 mins read
208c3354-9e5d-4bc5-943d-6c64dac8433f
மைக்ரோன் செமிகண்டக்டர் ஏஷியா நிறுவனத்துக்கு நேற்று வருகை அளித்த அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு (நடுவில்) அந்நிறுவனத்தின் மின்னிலக்கத் திட்டம் பற்றி விளக்கமளிக்கப்படு கிறது. அவருக்குப் பக்கத்தில் அந்நிறுவனத்தின் உதவித் தலை வரும் சிங்கப்பூர் கிளையின் மேலாளருமான திரு சென் கோக் சிங் நிற்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உயர் தேர்ச்சி பெற்றுள்ள உடற்குறை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கூடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

உடற்குறை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்துள்ள போதிலும் உயர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அது இன்னமும் குறைவாகவே உள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

உட்லண்ட்ஸில் உள்ள 'மைக்ரோன் செமிகண்டக்டர் ஏஷியா' நிறுவனத்துக்கு நேற்று வருகை புரிந்த அதிபர் ஹலிமா யாக்கோப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இந்த நிறுவனம் 8,600 ஊழியர்களையும் உலக அளவில் 40,000 ஊழியர்களைக் கொண்டுஉள்ளது.

அதிபர் சவால் 2020 'எனேபிளிங் எம்பிளாய்மெண்ட் பிளெட்ஜ்' ஆவணத்தில் முதன் முதலில் கையெழுத்திட்ட தொழில்நுட்ப நிறுவனமாக மைக்ரோன் விளங்குகிறது.

இதன்மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ஊழியரணி, உடற்குறையுள்ளோருக்கு ஆதவரளிப்பது ஆகியவற்றுக்கு தனது கடப்பாட்டை மைக்ரோன் தெரிவித்துள்ளது.

"அதிபர் சவால் திட்டத்தின்கீழ் உடற்குறையுள்ளோருக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது பற்றி சிந்தித்து வருகிறோம். இவர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் சேவைத் துறையில் மட்டுமே உள்ளது.

"இவர்களில் உயர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை, குறிப்பாக தொழில்நுட்ப, பொறியியல் துறைகளில் அதிகரிக்கும் வழிமுறைகளை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பேசிய மைக்ரோன் நிறுவனத்தின் உதவித் தலைவரான சென் கோக் சிங், பல வகையான உடற்குறை உள்ளவர்களை வரவேற்று வேலையிடம் தரமிக்கதாக, அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்கும் நோக்கில் மைக்ரோன் ஊழியர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

இதில் வேலையிடத்தை நிலைமைக்கு ஏற்றவாறு சரிசெய்தல், பணி நிமித்தம், நிபுணத்துவ மேம்பாடு போன்றவற்றை மின்னிலக்க தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பது போன்றவறை அடங்கும்.

அதிபர் தமது வருகையின்போது அந்நிறுவனத்தின் உடற்குறையுள்ள ஊழியர்களுடன் உரையாடினார்.

அத்துடன், அதிகம் நடக்கத் தேவையில்லாமல் ஒருவர் தமது மேசையில் அமர்ந்தவாறே பணி செய்யும் விதமாக அமைந்துள்ள 'ரிமோட் ஆப்பரேஷன் சென்டர்' என்ற பிரிவின் செயல்பாட்டைப் பார்வையிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் கேட்டறிந்தார் அதிபர் ஹலிமா.