எஸ்.வெங்கடேஷ்வரன்
ஜூன், ஜூலை மாதங்கள் பல இளையர்கள் படிப்பை முடித்து பட்ட தாரிகளாக உருமாறும் காலகட்டம். வேலை வாய்ப்பு தேடி பலர் தொழில் சந்தைக்குள் வரும் இச்சமயத்தில் கொவிட்-19 கிருமிப் பரவல் பெரும் சவாலாக உள்ளது.
இந்நேரத்தில் வேலை தேடும் இளையர்களுக்குக் கைகொடுக்கும் வண்ணம் கடந்த 26ஆம் தேதி கூகல் நிறுவனம் பயிலரங்கு ஒன்றை வழிநடத்தியது.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், (சிண்டா), மெண்டாக்கி, 'தி கோடேட் பிராஜெக்ட்' (The Codette Project) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கூகல் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சிண்டாவின் 'மென்டோர் மி' (Mentor Me) திட்டத்தின்கீழ் பயனடையும் 64 இளையர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு வேலை இல்லாத இளையர்களின் எண்ணிக்கை அதிகமானதையும் தற்போது சீராகி வரும் பொருளாதாரச் சூழலில் இந்திய இளையர்களுக்கும் பட்டதாரி களுக்கும் வேலை வாய்ப்புகள் உயர்ந்து வருவதையும் சுட்டினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
"இதுபோன்ற முயற்சிகளின் மூலம் நம் இளையர்கள் வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வையும் அதைப் பெறும் சாத்தியத்தையும் அடைகிறார்கள். இளையர்கள் வாழ்க்கைத் தொழில் குறித்த நல்ல இலக்குகளை அமைத்துக்கொள்ள விழிப்புணர்வே முதல் படி," என்றார் திரு அன்பரசு.
வேலை, கல்விச் சாதனைகளை பட்டியலிடும் அனுபவக் குறிப்பை (CV) எழுதும் முறைகள், நேர்காணல்களை அணுகுவதற்கான திறன்கள், வேலையிடத்தில் சிறப்பாகப் பணி செய்வதற்கான வழிமுறைகள், கூகல் ஊழியர்களின் அனுபவங்களும் ஆலோசனைகளும் என பங்கேற்பாளர்களுக்குப் பயனுள்ள பல தகவல்கள் பயிலரங்கில் பகிரப்பட்டன.
அனுபவக் குறிப்பில் கவனம்
"அனுபவக் குறிப்பில் நிறைய தகவல்களை உள்ளடக்குவதைவிட முக்கியமான தகவல்களை மட்டும் சுருக்கி எழுதுவது நல்லது. விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்ற வகையில் குறிப்பை மாற்றியமைக்க கற்றுக்கொண்டேன்," என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பட்டதாரி குமாரி மாதங்கி இளங்கோவன், 23.
தற்போது முழுநேர வேலையைத் தேடிவரும் மாதங்கி, பயிலரங்கில் தாம் கற்ற நேர்காணல் திறன்களும் வேலையில் உற்பத்தித்திறன், மன நலன், உடல்நலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கத் தரப்பட்ட ஆலோசனைகளும் உதவும் என்றார்.
ஆராய்ச்சி தேவை
"நேர்காணலுக்கு முன், விண்ணப்பிக்கும் நிறுவனத்தையும் அங்குள்ள ஊழியர்களையும் பற்றி நன்கு ஆராய்வது முக்கியம். தன்னம்பிக்கையுடன் பதில்கள் சொல்வதுடன், நேர்காணல் நடத்துபவரிடம் கேள்விகள் கேட்கவும் தயாராக இருக்கவேண்டும்," என்றார் மாதங்கி.
கல்வி, வேலை அனுபவத்தை வார்த்தைகளால் மட்டும் விவரிக்காமல் அது குறித்த முக்கிய தரவுகளை அனுபவக் குறிப்பில் உள்ளடக்குவது அதற்கு சிறப்பு சேர்க்கும் என்றார் சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகத்தின் இயந்திரப் பொருளியல் துறையில் நான்காம் ஆண்டு படிக்கும் திரு அமிருல் ஆஷிக்.
"வெற்றி கிடைத்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று இல்லாமல் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவதே தொழிலில் வெற்றி காண்பதற்கு சிறந்த வழி என்பது நான் எடுத்துச்செல்லும் முக்கிய பாடம்," என்றார் அமிருல், 24.
பாதி வெற்றியை அடையலாம்
ஊழியர் சந்தைக்குள் நுைழவது கடினமான அனுபவமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார் கூகல் நிறுவனத்தின் பொருள் விளம்பரத் துறை துணை நிர்வாகி திரு ஷாஃப்பிக் ஹானாஃப்பி.
"வலுவான அனுபவக் குறிப்பை உருவாக்கி நேர்காணல்களில் நன்கு தோற்றமளிப்பதன் மூலம் சேர விரும்பும் நிறுவனத்திடம் உங்கள் மதிப்பை எடுத்துைரக்கும் போரில் பாதி வெற்றி கண்டு விடலாம். இளையர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உள்ளூர் சமூக பங்காளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்," என்றார் திரு ஷாஃப்பிக், 26.
'மென்டோர் மி' திட்டம்
இதற்கிடையே, இவ்வாண்டுக்கான சிண்டாவின் 'மென்டோர் மி' திட்டம் கடந்த ஐந்து மாதங்களாக இயங்கி வருகிறது.
நான்கு ஆண்டுகளாக நடப்பில் இருக்கும் இத்திட்டம், வேலை தேடும் இளையர்களை தொழில் நிபுணர்களுடன் இணைக்கிறது. நிபுணர்களின் வழிகாட்டுதலின் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறும் முயற்சிக்கு இத்திட்டம் கைகொடுக்கிறது.
வேலை தேடுவோருக்கான முக்கிய குறிப்புகள்
1. அனுபவக் குறிப்பில் நீங்கள் செய்த அனைத்தையும் அடக்குவது அவசியமில்லை. முக்கிய தகவல்களை மட்டும் சுருக்கமாக எழுதினால் கடுமையான போட்டிக்கிடையே உங்கள் குறிப்பைத் தனித்துத் தெரியவைக்கும். தொழில் உலகில் குறைந்த அனுபவம் பெற்றவர்கள் அல்லது புதிதாக நுழைபவர்கள் ஒரு பக்கத்திற்கும் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள் இரண்டு பக்கங்களுக்கும் உட்பட்டு குறிப்பை எழுதுவது நல்லது.
2. காப்புக் கடிதம் (cover letter) எழுத வேண்டிய தேவை இல்லை. ஒரு நிறுவனம் அதைக் கேட்டாலோ அனுபவக் குறிப்பில் உள்ள இடைவெளிகளைக் குறித்த விளக்கம் வழங்கவோ காப்புக் கடிதத்தைச் சமர்ப்பிக்கலாம். பொதுவாக, அனுபவக் குறிப்பைச் சிறப்பாக்குவதில் முழு கவனத்தைச் செலுத்துங்கள்.
3. ஒவ்வொரு வேலைக்கும் அதற்கான குறிப்பிட்ட தேவைகள் இருக்கும். விண்ணப்பிக்கும் வேலைக்கு தகுந்த வகையில் அனுபவக் குறிப்பை மாற்றுவது நல்லது. ஒரு பிரதானக் குறிப்பை தயாரித்துவிட்டு, பிறகு அந்தந்த வேலைக்கு ஏற்றதுபோல அதை மாற்றியமைக்கலாம்.
4. எளிதாக புரிந்துகொள்ளும் மொழியில், சுருக்கமாக, மொழி சார்ந்த பிழைகள் இல்லாமல், குளறுபடி இல்லாத குறிப்பை அனுப்பவும். எவ்வளவு சாதனைகளை நீங்கள் படைத்திருந்தாலும் சில வேளைகளில் ஓர் எழுத்துப் பிழைக்காககூட உங்கள் விண்ணப்பத்தை நிறுவனங்கள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
5. நேர்காணலுக்கு முன், சேர விரும்பும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆராயவும். முடிந்தால் நேர்காணலை நடத்துபவர் யார் என்று தெரிந்துகொள்வதும் நல்லது. முடிந்த அளவுக்கு கூடுதல் விவரங்களைத் திரட்டி, அவற்றை மையமாகக் கொண்டு, அந்த நிறுவனத்திற்கு உங்களால் என்ன மதிப்பைக் கூட்ட முடியும் என்பதையும் சுட்டிக் காட்டலாம். இவ்வாறு தயார் செய்வதினால் நேர்காணலின்போது இயல்பாக தன்னம்பிக்கை வரும்.