மெய்நிகரும் உண்மையும் கலந்த உலகத்தில் நாம் தற்போது வாழ்கிறோம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால், நாம் அனைவரும் மெய்நிகர்தான் மெய் என கருதப்படும், நேரலைத் தொழில்நுட்பம் சார்ந்த உலகத்தில் தற்போது இருக்கிறோம் என்று கூறியுள்ளார் திரு கபிலன் வைரமுத்து.
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான திரு கபிலன் வைரமுத்து, 39, தமது 18வது வயதிலிருந்து எழுதி வருகிறார். 2014-ல் இவர் வெளியிட்ட 'மெய்நிகரி' நாவல், கவனம் பெற்றது.
இந்த நாவலை தழுவி கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'கவண்' திரைப்படம் உருவாகியது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பாடத்திட்டத்திலும் மெய்நிகரி சேர்க்கப்பட்டது.
திரு கபிலன் பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான திரு வைரமுத்துவின் மகனும்கூட.
தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வாசிப்பு விழா 2021-ல் சிறப்பு எழுத்தாளர்களில் ஒருவரான திரு கபிலன், மெய்நிகரி நாவலில் அடங்கியுள்ள தொழில்நுட்பக் கூறுகள் குறித்தும் தமது கவிதை அனுபவத்தையும் அண்மையில் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி, ஜூன் 26ம் தேதி மாலை நூலகத் தமிழ்ச் சேவைகளின் பேஸ்ஃபுக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
நமது உலகங்கள்
நம் முன்னால் எத்தனை உலகங்கள் உள்ளன, இந்த உலகங்களின் இலக்கு என்ன என்ற இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முற்பட்டார் திரு கபிலன்.
ஆரம்பகாலத்தில் எந்தவித மெய்நிகர் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாமல், மெய் மட்டுமே இருந்த உலகமே முதல் வகையான உலகம். இரண்டாவது உலகம், மெய்நிகரையும் மெய்யும் கொண்ட ஓர் உலகம் (virtual and real world). இதில் தகவல் தொடர்பும் தொழில்நுட்ப பிம்பங்களும் வளர்ந்தன என்று திரு கபிலன் கூறினார்.
மூன்றாவது, நேரலை என்னும் தொழில்நுட்பம் சார்ந்த தற்போதைய உலகம்.
இவற்றையும் தாண்டி நான்காவது வகை உலகத்திற்கு நாம் செல்வோமோ என்ற கேள்வியை திரு கபிலன் எழுப்பினார். அந்த நான்காவது உலகத்தில் நாம் ஒரு
வருக்கு ஒருவர் பார்த்துப் பேசுவதற்கு நேரடி சந்திப்பும் சம்மதமும் அவசியமில்லை என்ற கற்பனையை அவர் முன்வைத்தார்.
மேல் குறிப்பிட்ட உலகங்கள் எந்த மாதிரியான உலகாக இருந்தாலும், அவற்றின் அடிப்படை இலக்கு மனிதர்களின் நிரந்தர மகிழ்ச்சியே என்றார் திரு கபிலன்.
குழந்தைகளின் எதிர்காலம்
பதின்ம பருவத்தில் நம் ஆழ் மனதைப் பாதித்த எண்ணங்களின் தொகுப்பு வெளிப்பாடுதான் இன்றைய நிகழ்காலம் என்றும், இன்றைய குழந்தைகளின் ஆழ்மனதில்தான் உண்மையான எதிர்காலம் உருவாகி வருகிறது என்றும் அவர் கூறினார்.
பெற்றோரின் கண்காணிப்பும் தகவல் யுகத்தின் கண்காணிப்பும் குழந்தைகளை சூழ்ந்துள்ளது எனக் கூறிய திரு கபிலன், குழந்தைகள் பெரும்பாலும் தகவல் யுகத்தின் கண்காணிப்பை நோக்கி செல்கின்றனர் என்றார். இச்சூழலில், எதையும் கேள்வி கேட்கும் தன்மையை அவர்
களுக்கு கற்றுத்தருவதே அவர்களுக்கு நாம் ஆற்றும் பங்கு என்றார்.
மின்னுவது எல்லாம் பொன் அல்ல
மெய்நிகரால் ஆன எதிர்கால உலகத்தில் எது உண்மை, எதை நம்ப வேண்டும் என்று இளையர்கள் பிரித்துப் பார்க்க, அவர்களுக்குக் கருவிகள் ேவண்டும் என்றும் திரு கபிலன் கோடிகாட்டினார்.
ஆஸ்திரேலியாவில் ஊடகத் துறையில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது 'கட்டமைப்பு கூறாய்வு (discourse analysis)' என்ற பாடத்தைப் பயின்றார்.
ஒரு மொழியை அதன் சமூகப் பின்னணியோடு புரிந்துகொள்வதே கட்டமைப்பு கூறாய்வு. ஊடகம் அதைப் பயன்படுத்தும் விதம் பற்றி 'கவண்' திரைப்படத்தில் திரு கபிலன் எழுதியுள்ளார்.
கட்டமைப்பு கூறாய்வை அடுத்த தலைமுறையினருக்கு ஒரு அடிப்படைத் திறனாக வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
தமது மூன்றாவது நாவலான மெய்நிகரியில் 70% தமது சொந்த அனுபவம் என்றும் மீதமுள்ள 30% நண்பர்களின் அனுபவம் என்றும் அவர் கூறினார்.
"நம்மைச் சுற்றி ஆயிரமாயிர ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவைதான் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை நிர்ணயிக்கின்றன. ஊடக உலகத்திற்குள் என்னென்ன நிகழ்கின்றன, அதன் நிர்வாக முகம் என்ன என்பதைத் தெளிவாக மெய்நிகரி எடுத்துரைக்கிறது," என்றார் திரு கபிலன்.
"இதில், பல தகவல்களும் உள்ளன. TRP எனும் தொலைக்காட்சிப் பார்வையாளர் புள்ளி எவ்வாறு கணக்கிடப்படுகிறது, நிகழ்ச்சிகள் உருவாக்கப்படும் விதம், எவ்வகை ஒலிபெருக்கிகளும் புகைப்படக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன போன்றவை அவற்றில் சில. மாணவர்களுக்கு இத்தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை எழுதினேன். அது படமாகவும் ஆயிற்று, பாடமாகவும் ஆயிற்று," என்றார் அவர்.
'மெய்நிகரி: ஒரு கவிப்பார்வை' என்ற இளையர் கவியரங்கு, வாசிப்பு விழா 2021ன் தொடர்பில் நிகழ்ச்சியாக ஜூலை 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
செய்தி: ஆர்த்தி சிவராஜன்