கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து வந்த சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாத 11 பேருக்கு நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குடிமக்களை அல்லது நிரந்தரவாசிகளைச் சார்ந்திருப்போர் போன்ற விதிவிலக்கான சூழல்களில் முறையீடுகள் ஏற்கப்பட்டு அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமுன், மார்ச் 1 முதல் ஏப்ரல் 23 வரை, குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாத 9,040 பேர் இந்தியாவில் இருந்து இங்கு வந்தனர் என்று அமைச்சர் சொன்னார்.
அவர்களில் 8,404 பேர் நீண்டகால அனுமதி அட்டை வைத்துள்ளோர் என்றும் பெரும்பான்மையோர் கட்டுமானம், கப்பல் பட்டறை, செய்முறைத் தொழில்முறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.