எம்ப்ளாய்மென்ட் பாஸ் பெற்று இருப்போரில் கடந்த 2005ஆம் ஆண்டு 14 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் விகிதம், கடந்த ஆண்டு 25% என கிட்டத்தட்ட இரட்டிப்பானது.
சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலின் விரைவான வளர்ச்சியே இதற்குக் காரணம் என்றும் சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு காரணமாக ‘எம்ப்ளாய்மென்ட் பாஸ்’ கொண்ட இந்தியர்களுக்கு அதிகச் சாதகமாக நடந்துகொள்வதால் அது நிகழவில்லை என்றும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று (ஜூலை 6) நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இதே காலகட்டத்தில், எம்ப்ளாய்மென்ட் பாஸ் பெற்று இருக்கும் சீன நாட்டவரின் விகிதம் கிட்டத்தட்ட நிலையாக இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சென்ற ஆண்டு வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்து, அவற்றின் சிங்கப்பூர் கிளைகளுக்கு அல்லது துணை நிறுவனங்களுக்கு 4,200 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வெளிநாட்டவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.