ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி
உலகநாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகளுக்குச் சவால் விடுத்து அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது கொவிட்-19 சூழல். இந்த நெருக்கடியிலும் நோயாளிகளின் நிலைமையை மேம்படுத்த, புத்தாக்கத்தைக் கையாள முடியும் என்று காட்டியுள்ளனர் தேசிய சுகாதார, புத்தாக்க விருதை வென்றவர்கள்.
விருது வென்றவர்களில் டான் டோக் சேங் மருத்துவமனையில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த 'ஃபிசியோ' உடற்பயிற்சி சிகிச்சையாளர் ரெத்தினம் கணேசனும் ஒருவர்.
இவரின் குழு உருவாக்கிய 'ஹார்ட்-ட்ரேக்' (Heart-Track) திறன்பேசி செயலி, இதய நோயாளி
களுக்கு உதவவல்லது. இதய அறுவை சிகிச்சை நோயாளிகள் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்யலாம் என்பதற்கு வழிகாட்டுவதுடன் அவ்வாறு அவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு உள்ளிட்ட சில அம்சங்களைச் செயலி கண்காணிக்கிறது.
செயலி உருவாக்கத்திற்கான தொழில்நுட்ப, மருத்துவத் தகவல்களைத் திரட்டித் தந்தார் 31 வயது ரெத்தினம்.
அத்துடன் செயலியை சோதித்துப் பார்ப்பது, செயலியைப் பற்றி மருத்துவக் கூட்டங்களில் விளக்குவது போன்ற பொறுப்புகளும் அவருக்குத் தரப்பட்டன.
"2019ஆம் ஆண்டு நடந்த சிங்கப்பூர் மருத்துவ காங்கிரசில் நானும் என் குழுவினரும் இந்தச் செயலி குறித்து பேசினோம்," என்று அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் தொடங்கிய செயலி உருவாக்கப் பணிகள், தற்போது இறுதிக் கட்டச் சோதனையில் உள்ளது என்று கூறிய ரெத்தினம், செயலியின் வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
செயலி தொழில்நுட்பம் தனக்குப் புதிது என்றாலும் நோயாளி
களின் நலன் மீதான அக்கறையே, இத்தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது என்றார்.
"இதய நோயாளிகள் மருத்துவ
மனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிகளைத் தகுந்த முறையில் திட்டமிட செயலி உதவுகிறது," என்று அவர் கூறினார்.
விருது வென்றதில் மனநிறைவு அடைவதாகக் கூறிய ரெத்தினம், கிருமிப் பரவல் சூழலின் கடுமையை எதிர்கொண்டு நோயாளிகளுக்காக போராடிய இந்த அனுபவம், மறக்க முடியாதது என்றார்.
விருது வென்ற குழுக்களில் இடம்பெற்ற மற்றொருவர், 32 வயது முகம்மது ரசீன் சம்சுதீன்.
டான் டோக் செங் மருத்துவ
மனையின் உருமாற்றப் பிரிவில் துணை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார் இவர். குறைவான வளங்களை நிறைவாகப் பயன்படுத்தி மருத்துவத் துறையினருக்காக தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த உதவியுள்ளார்.
"மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தருவதும் திறன்களை வளர்ப்பதற்கு துணையாக இருப்பதும் எங்கள் பிரிவின் முக்கிய இலக்குகளாகும்," என்று அவர் கூறினார்.
பிறருக்குப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ள ரசீன், தமது வேலைக்கான ஒவ்வொரு பணித்திட்டத்திலும் உள்ள சவாலுக்குத் தீர்வு காணும் அனுபவம் சுவாரசியம் என்றார்.
தாதியர், மருந்தக நிபுணர்கள், மருத்துவப் பராமரிப்பாளர்கள் ஆகியோர் தாம் பங்காற்றிய பணித்திட்டத்தில் ஈடுபட்டதாக ரசீன் கூறினார். வளங்கள் விரயமடைவதைக் குறைக்கும் அதே வேளையில் இருக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் தமது திட்டம், கொவிட்-19 சூழலுக்குப் பொருத்தமாக இருந்ததாகக் கூறினார்.
"எந்த இடத்தில் இருந்தாலும் கற்றல் தொடரும்படி வகைசெய்யும் செயலியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். மின்னிலக்க முறை மூலம், கற்பவரே தமது கற்றலை வழிநடத்திச் செல்கிறார்," என்று அவர் கூறினார்.
கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடையே சுமார் 670 ஊழியர்கள் இந்தச் செயலியுடன் இணைந்தனர்.
இந்த எண்ணிக்கை, வழக்கமான வகுப்பறைச் சூழலில் நடத்தப்படும் வகுப்புகளில் சேரும் எண்ணிக்கையான 400ஐக் காட்டிலும் அதிகம் என்று ரசீன் தெரிவித்தார். இத்தகைய வகுப்புகளுக்கான தயாரிப்பு நேரம் 90% மிச்சமானதாக அவர் கூறினார்.
விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி என்றாலும் நோயாளி
களுக்கு இத்திட்டத்தால் கிடைக்கப்போகும் பயனை நினைத்து மேலும் திருப்தி அடைவதாக ரசீன் தெரிவித்தார்.