ஆர்த்தி சிவராஜன்
திரு யுரேஷ் குமாரின் சிறுவயது நினைவுகளில் இரண்டு விஷயங்கள் அவர் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானித்ததில் முக்கியமானவை. ஒன்று, வீடுகள், கட்டடங்களின் உட்புறத்தை வடிவமைக்கும் நிபுணராக வேண்டும் என்று அவருக்கு இருந்த ஆர்வம். மற்றொன்று, அவர் வளர்ந்த தெலுக் பிளாங்கா வட்டாரம்.
இன்று இரண்டையும் இணைத்து உட்புற வடிவமைப்புத் துறையில் கவனிப்பைப் பெற்றுள்ளார் திரு யுரேஷ், 20.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் உட்புற வடிவமைப்பு துறையில் இந்த ஆண்டு பட்டயம் பெற்ற திரு யுரேஷ் குமாரின் படைப்பு இவ்வாண்டின் சிங்கப்பூர் உட்புற வடிவமைப்பு விழாவின் ஒரு பகுதியாக தேசிய வடிவமைப்பு நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
விழாவில் 'கொவிட்-19க்கு பிந்தைய உலகில் வாழ்வது' என்ற தலைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பல உட்புற வடிவமைப்புப் படைப்புகள் ஜூன் 18ஆம் தேதி முதல் நேற்று ஜூலை 18ஆம் தேதி வரை காட்சிக்கு வைக்கபட்டன.
விழாவின் முக்கிய சிறப்பம்சமான 'ஜெனரேஷன் நெக்ஸ்ட்' எனும் பிரிவில், நமது எதிர்காலத்தை பாதிக்கும் இன்றைய சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்கிய இளையர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அதில் திரு யுரேஷ், கொவிட்-19 க்கு பிந்தைய உலகில் தெலுக் பிளாங்கா சமூக மன்றம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதைத் தமது படைப்பின் மூலம் காட்ட விரும்பினார்.
"தெலுக் பிளாங்கா வட்டாரத்தில் நான் வளர்ந்ததால், ஒரு சமூகப் பொறுப்பு என்னுள் இருந்தது. கொவிட்-19 தொற்று பரவிவரும் காலகட்டத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன்," என்று கூறினார் திரு யுரேஷ்.
ஓர் இடத்தை வடிவமைக்கும்போது, அந்த இடத்தை பயன்படுத்தும் நபர்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைப்பது முக்கியம் எனக் கூறிய திரு யுரேஷ், தெலுக் பிளாங்கா சமூக மன்றத்திற்குச் சென்று, அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையையும் தேவைகளையும் கவனித்து அறிந்து தமது படைப்பை உருவாக்கினார்.
முதியவர்களுக்கான ஓய்வுப்பகுதி, அனைவருக்கும் உடற்பயிற்சிக் கூடம், மாணவர்களுக்கு வகுப்பறை உள்ளிட்ட தேவைகளை அறிந்து, சமூக மன்றத்தில் தொற்றுநோய் பரவல் இல்லாமல் அனை
வருக்கும் பாதுகாப்பான முறையில் இந்த வசதிகளை ஏற்பாடு செய்ய விரும்பினார் திரு யுரேஷ்.
"சமூக மன்றங்கள் மக்கள் கூடும் ஓர் இடம். ஆனால் இந்த கிருமிப் பரவல் சூழலில் அனைவரும் அடிக்கடி அங்கு செல்ல முடியாது. ஒரு கலைஞராக இந்த இடங்களை பாதுகாப்பாக வடிவமைக்க நினைத்தேன். இதன் மூலம் கிறுமித்தொற்றைத் தடுப்பதே என் நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.
தமது திட்டத்தின் மூலம் எதிர்காலக் கட்டடங்களில் வேளாண்மையின் கூறுகளையும் புகுத்த முற்பட்டார் திரு யுரேஷ்.
வேளாண்மைக்கு நிறைய இடம் தேவை. ஆனால் சிங்கப்பூரில் அது இல்லை.
சமூக மன்றங்களில் இருக்கும் இடத்தை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் பூங்காக்களையும் வேளாண் பகுதியையும் உள்ளடக்கிய ஓர் இடத்தை இவர் வடிவமைக்க நினைத்தார்.
தமது கற்பனை கட்டடமாக வடிவம் பெற்றால், சிங்கப்பூரில் உள்ள முதியவர்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் ஓர் இடமாக இது இருக்கும் என இவர் நம்புகிறார்.
"சிறு வயதில் லெகோ அடுக்குகளை அடுக்கி விளையாடியதில் தொடங்கிய ஆர்வம், இன்று பட்டயம், ஒரு கண்காட்சி என என்னை வெகுதூரம் அழைத்து வந்துள்ளது. மற்ற படைப்புகள் மத்தியில் என் படைப்பும் காட்சிப்படுத்தப்பட்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி," எனப் பெருமிதம் கொண்டார் திரு யுரேஷ்.