ஆர்ச்சர்ட் ரோடு அருகே கப்பேஜ் பிளாசாவுக்குப் பின்பக்கம் வெள்ளிக்கிழமை இரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மாண்டார். இதர ஆறு பேர் காயம் அடைந்தனர். அந்த விபத்தைக் காட்டும் காணொளிகளும் படங்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டன.
கார், லாரி, இரண்டு மோட்டார்சைக்கிள்கள் ஆகியவை விபத்தில் சிக்கியதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
காயம் அடைந்தவர்கள் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் 31 வயதுள்ள மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்த போலிசார், புலன்விசாரணை நடப்பதாகவும் கூறினர்.
விபத்து காரணமாக போக்குவரத்துத் தேக்கம் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய ஒரு கார் முற்றிலும் எரிந்தது. லாரியும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் குடைசாய்ந்த சாலையில் கிடந்தன. அவற்றில் யாரும் சிக்கி இருக்கவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.