சிங்கப்பூரில் புதிதாக 117 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் 46 பேர், பெருகிவரும் ஜூரோங் மீன்பிடித் துறைமுக கிருமித்தொற்றுக் குழுமத்தை சார்ந்தவர்கள்.
இதனுடன் அந்தக் குழுமத்தைச் சேர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை 787க்கு உயர்ந்துள்ளது. அத்துடன், கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடன் ஐந்து புதிய சம்பவங்கள் தொடர்புடையவை. அதனுடன் அக்குழுமத்தின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 237க்கு உயர்ந்துள்ளது.
சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 117 பேரில் 43 பேர், முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்புகொண்டு ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். மற்ற 36 பேர் கண்காணிப்பின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. எஞ்சியுள்ள 38 பேர், புதிய, தொடர்புகள் இல்லாதோராக உள்ளனர்.
பாதிக்கப்பட்டோரில் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு மூத்தவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஒரு முறை மட்டுமே போட்டவர்கள். அவர்கள் கடுமையாக நோய்க்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், எட்டு பேர் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.