ஆர்த்தி சிவராஜன்
புதிய பட்டதாரிகளுக்கும் உயர்கல்விப் பட்டம் பெறப்போகும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தங்கள் தொழில் குறிக்கோள்களையும் ஆசைகளையும் அடைய உதவி செய்யும் விதத்தில் சிண்டா இளையர் மன்றமும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழா அமைப்பும் ஒன்றிணைந்து 'கனெக்டிங் டிரெயில்ப்ளேஸர்ஸ்' (Connecting Trailblazers) எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தின.
கடந்த ஜூலை 17ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 'ஸூம்' செயலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 40 இளையர்கள் கலந்துகொண்டனர்.
தொழில்முனைப்பு, காட்சிக்கலை மற்றும் மேடைக்கலை, அரசாங்கச் சேவை, பொதுச் சேவை, பொறியியல், ஊடகம், தகவல் தொடர்பு, கணக்கியல், நிதி, கணினி மற்றும் தரவு பகுப்பாய்வு, வணிகம், சுகாதாரம், சமூகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் 15 தொழில் துறை நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் இளையர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர்.
பேச்சாளர்களாக, வேலையில் சேர்ந்துள்ள புதிய பட்டதாரிகளும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றவர்களும் இடம்பெற்றனர்.
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியராக இருப்பது குறித்தும் கிருமித்தொற்று சமயத்தில் ஓர் அமைப்பில் வேலைக்குச் சேரும் அனுபவம் குறித்தும் புதிய பட்டதாரிகள் பகிர்ந்துகொண்டனர்.
சில ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றவர்கள், தொழில்துறைப் போக்குகள், அதன் வளர்ச்சி ஆகியவை பற்றியும் அதிக செயல்திறன் கொண்ட பணியாளராவது எப்படி என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.
மூன்று சுற்றுகளில் முழுமையான
தகவல்கள்
நிகழ்வில் கலந்துகொண்ட இளையர்களும் தொழில்துறைப் பேச்சாளர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடுவதற்காக மூன்று சுற்றுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
முதல் சுற்றில், பங்கேற்பாளர் களுக்கு விருப்பமான தொழில் துறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும் அந்தக் குறிப்
பிட்ட துறையைச் சார்ந்த பேச்சாளர்களிடம் மட்டும் கலந்துரையாடுவதற்கும் வசதியாக 'பிரேக் அவுட் ரூம்ஸ்' எனும் தனித்தனி மெய்நிகர் அறைகளில் பிரிக்கப்பட்டனர்.
இரண்டாவது சுற்று, பங்கேற்பாளர்கள் அதிகம் அறிந்திராத மற்ற தொழில் துறைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதில் தாங்கள் அதிக ஆர்வம் காட்டாத மற்ற துறை நிபுணர்கள் பேசக் கேட்டனர் பங்கேற்பாளர்கள்.
இறுதிச் சுற்றில், அழைக்கப்பட்ட அனைத்து தொழில் துறை பேச்சாளர்களிடமிருந்தும் பங்கேற்பாளர்கள் நுணுக்கமான உதவிக்குறிப்புகளைக் கேட்டறிந்த, திறந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
அனைவருக்கும் வாய்ப்புகள்
தேவை
சிண்டா இளையர் மன்றத்தின் தலைவரும் மேலாண்மைத் துறை ஆலோசகருமான துர்கா ராஜேந்திரன், 29, "தொழில்துறைப் பற்றி அறிந்துகொள்ள பள்ளிகளில் போதுமான வாய்ப்புகள் அமைவதில்லை என்று பலர் கூறுவதுண்டு. இக்குறையை நீக்க இதுபோன்ற கூடுதல் நிகழ்வுகள் தேவை. இத்தகைய வாய்ப்புகள் பொதுவாக சிறந்த செயல்திறன் கொண்ட இளையர்களுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால் மற்றவர் களுக்கும் அதே அளவிலான வாய்ப்புகள் தேவை," என்றார்.
"இது போன்ற சில ஏற்றத்தாழ்வு கள் காரணமாக நம் இந்திய இளையர்களுக்கு மற்றவர்களுடனான தொழில் சார்ந்தத் தொடர்புகள் கிடைக்காமல் போகலாம். ஆகையால் சமூக அளவிலான இத்தகைய திட்டங்கள், நம் இளையர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கின்றன," என்று குமாரி துர்கா கூறினார்.
இத்தகைய நிகழ்ச்சியில் பேச்சாளர்களின் தேர்வு மிக முக்கியம் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.
தமிழா அமைப்பின் தலைவரும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக உளவியல், தொடர்புத் துறை மாணவியுமான தேவியானி, 22, "நிகழ்ச்சியில் பேசுவதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த, வேலைகளில் நன்கு தேர்ந்த நிபுணர்களை அழைத்தோம்," என்று கூறினார்.
பயன்பெற்ற பங்கேற்பாளர்கள்
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் அரசியல் ஆய்வுத் துறை படிக்கும் பிரபுதேவா, 24, ஆலோசனைத் துறையில் தம்மை எவ்வாறு சிறப்பாக நிலைநிறுத்திக் கொள்வது என்று அறிய விரும்பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
"எனது தொழில் குறிக்கோள்களை அடைவதற்கான வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி தெளிவு பெற்றேன்.
"பேச்சாளர்களில் ஒருவரான திருமதி பர்ணிகா திரிபாத்தி 'நாம் தகுதியும் திறமையும் உடையவர்கள்' என்ற கருத்தை முன்வைத்தார். அவர் கூறிய வார்த்தைகள் என்னைச் சிறப்பாகச் செயல்படவும் மேம்படுத்திக் கொள்ளவும் தூண்டின," என்று பகிர்ந்தார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் படிக்கும் கெளசல்யா கணேசன், 22, பட்டப்படிப்புக்குப் பின்னர் கணினி, தரவுப் பகுப்பாய்வு துறையில் சேர விரும்புகிறார்.
ஆனால், அந்தச் சமயத்தில் வேலைவாய்ப்புகள் எவ்வாறு இருக்கும் என்று சற்று அச்சப்பட்டதாக கௌசல்யா கூறினார்.
"தொழில் வல்லுநர்களிடமிருந்து தொழில் நுண்ணறிவைப் பெறவும் பணியிடச் சூழலை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் வழிகள் பற்றி ஆலோசனையைப் பெறவும் நான் விரும்பினேன்," என்றார் அவர்.
கணிணி, தரவுப் பகுப்பாய்வுத் துறை பெரும்பாலும் இளையர்கள் பணிபுரியும் ஒரு வளர்ந்து வரும் துறை.
"அதனால், இத்துறையில் நுழையும்போது எந்த வகையான தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் எந்த வகையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பதைப் பற்றியும் பேச்சாளர்கள் பகிர்ந்த அனுபவங்கள் எனக்கு மிகவும் பயனளித்தன," என்று கூறினார் கெளசல்யா.