இந்து இளங்கோவன்
புற்றுநோயால் அவதிப்பட்ட பாட்டியுடன் ஒன்பது வயதிலிருந்தே மருத்துவமனைக்குப் பலமுறை சென்று வருவார் ஸ்ரீ துர்க்கா, 19. அங்கு இருந்த தாதியர், பாட்டியைக் கனிவுடனும் பொறுமையுடனும் கவனித்துக்கொண்டது இன்றும் தன் நினைவில் நிற்பதாகக் கூறும் துர்க்கா, அடுத்த மாதம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தாதிமைத் துறையில் தன் படிப்பைத் துவங்கவுள்ளார்.
சிறுவயதில் வார இறுதி நாட்களெல்லாம் பாட்டியுடன் மருத்துவமனையில் இருந்தவாறு வீட்டுப்பாடங்கள் செய்த துர்க்கா, தாதியர் என்னென்ன செய்கிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள், அவர்களின் வேலைப்பளு என்ன, இவற்றை எல்லாம் கவனித்துத் தெரிந்துகொண்டதாக கூறினார்.
பாட்டிக்கு மட்டும் அல்ல தன் தாத்தாவிற்கு ஏதேனும் அவசர மருத்துவத் தேவை ஏற்பட்டாலும் துர்க்கா அவருடன் செல்வாராம். இப்படிப் பல முறை மருத்துவமனைக்குச் சென்று வந்த இவர், எதிர்காலத்தில் மீண்டும் அந்த மருத்துவமனையிலேயே தாதியாகப் பணியாற்ற விரும்புகிறார்.
குடும்பத்தினர், உறவினர்கள் பலர் தம்மை மருத்துவர் கல்வி கற்கச் சொல்லி ஊக்குவித்தாலும் தாதிமைத் துறையே தனக்கு ஏற்றது என்ற உறுதியுடன் இருக்கும் துர்க்காவிற்குக் கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று தாதிமைத் துறைக்கான சுகாதாரப் பராமரிப்பு உபகாரச் சம்பளத்தை வழங்கியது சுகாதார அமைச்சு.
விருது வழங்கும் விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டு உபகாரச் சம்பளம் பெற்ற 164 எதிர்காலச் சுகாதாரத் துறையினருக்கும் உற்சாக வார்த்தைகள் கூறினார். கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழல், சுகாதாரத் துறைக்குப் பல சவால்களை விடுத்து வந்தாலும் தொடர்ந்து தங்களின் கடமையை ஆற்றிவரும் சுகாதாரப் பராமரிப்புத் துறையினருக்குத் தமது நன்றியைத் தெரிவித்து உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களைப் பெரிதும் பாராட்டினார் திரு ஓங். இந்த ஆண்டு, எட்டு பிரிவுகளைக் கொண்ட சுகாதாரப் பராமரிப்பு துறையின் உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட 30% அதிகமாகும்.
தொழில் தொடர்பு சிகிச்சை முறைக்கான உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் நூர் ஹசிகா சலீமுதீனும் (19) ஒருவர்.
சிறுவயது முதல் இன்று வரை தமது பாட்டி, தாத்தாவைக் கவனித்து வரும் இவருக்கு, மருத்துவத் துறையில் ஆர்வம் வளர்ந்தது. 69 வயதாகும் பாட்டி ஒரு முறை அறுவை சிகிச்சை செய்யும் காலகட்டத்தில் உடல் அளவிலும் மனதளவிலும் சில பாதிப்புகளையும் விளைவுகளையும் சந்தித்ததை நினைவுகூர்ந்தார் ஹசிகா.
பாட்டி படிப்படியாக குணமடைந்து வருவதைப் பார்த்து மனநிறைவு கொண்டதாக கூறினார். கூடிய விரைவில் சிங்கப்பூர் தொழில்நுட்ப கழகத்தில் (SIT) தொழில் தொடர்பு சிகிச்சைத் துறையில் தமது பட்டப்படிப்பை ஹசிகா தொடங்கவிருக்கிறார்.
"நான் தனியார் மருத்துவமனையில் வேலைப் பயிற்சி பெற்றேன். ஒரு முறை வயதான தம்பதியர் என்னிடம் வந்து நன்றி தெரிவித்து, 'நீ செய்யும் இந்தப் பணி மகத்துவம் வாய்ந்த, மரியாதைக்குரிய பணி. சேவையையே முழுநேரமாக புரியும் இந்த வேலை கடினமானது. ஆனால் மிக அவசியமானது' என்று கூறிச் சென்றனர். இந்தத் துறையை நான் தேர்வு செய்ய அந்த வார்த்தைகள் மேலும் எனக்கு உற்சாகமளித்தன," என்றார் ஹசிகா.
தொடக்கக் கல்லூரியில் பயின்ற துர்க்கா, ஹசிகா இருவரும் சிறுவயதிலேயே சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு தங்களின் தொழில் பாதையை அத்துறையிலேயே செதுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.