இந்த ஆண்டின் தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருடன் 300க்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் மெய்நிகர் தளத்தில் கலந்துகொண்டனர். நேற்று இஸ்தானா வளாகத்தில் நடைபெற்ற சடங்கிற்கு அதிபர் ஹலிமா, பிரதமர் லீயை வரவேற்றார்.
ஆண்டுதோறும் தேசிய தினத்தையொட்டி நடைபெற்றுவரும் சடங்கில் சிங்கப்பூர் நாணய ஆணையம், லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் ஸூம் தளத்தின்வழி மெய்நிகர் வடிவில் பங்கேற்றனர். கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு சடங்கு நேரடியாகவும் மெய்நிகர் வடிவிலும் நடத்தப்பட்டது. மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஆகியோரும் மெய்நிகர் தளத்தில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் தேசிய நிறங்களான சிவப்பு மற்றும் வெள்ளையில் உள்ள ஆடைகளை அணிந்திருந்த பங்கேற்பாளர்கள், தேசியப் பற்றுறுதியைச் சொல்லி தேசிய கீதத்தைப் பாடினர். இந்த ஆண்டின் தேசிய தினப் பாடலான 'தி ரோட் அஹெட்', சடங்கின் இறுதிக் கட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது.
பாடலாசிரியரும் பாடகருமான லின்யிங், இசைத் தயாரிப்பாளர் எவன் லோ ஆகியோரால் இயற்றப்பட்ட அந்தப் பாடல் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூப், ஸ்பொட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் ஆகிய தளங்களில் பாடல் இடம்பெற்றுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்டம் தொடரும் இவ்வேளையில், ஒன்றுபட்டு நிற்குமாறு அதிபர் ஹலிமா நேற்று மதியம் ஃபேஸ்புக் பதிவில் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.
"கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் நமது தினசரி வாழ்க்கை முறையை மாற்றியிருக்கலாம். இருந்தாலும் பல காலமாக நடைபெற்றுவரும் தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து நடத்த முடிந்தவரை முயற்சி செய்வோம்," என்றார் அதிபர் ஹலிமா.
சென்ற ஆண்டும் பற்றுறுதிச் சடங்கு நேரடியாகவும் மெய்நிகர் வடிவிலும் நடைபெற்றது.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு இம்மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.