கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத பள்ளி ஆசிரியர் களுக்கும் ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து வாரத்துக்கு இரண்டு முறை கிருமி விரைவுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். புதிய 'தடுப்பூசி அல்லது அடிக்கடி பரிசோதனை' திட்டத்தின் கீழ் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், பள்ளியில் தொற்று ஏற்படும்போது, அந்த வகுப்புநிலையில் உள்ள எல்லா மாணவர்களையும் வீட்டில் இருந்து கற்கும் முறைக்கு மாற்றாமல், அதே வகுப்புகள், இணைப்பாட நடவடிக்கைகள் ஆகியவற்றில் உள்ள சக மாணவர்களுக்கு மட்டும் விடுப்பு அல்லது தனிமை உத்தரவு வழங்கப்படும். கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், துணைப்பாட அல்லது செறிவூட்டு நிலையங்களில் பணியாற்றுவோர் உட்பட, 12 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள சிறுவர்களுடன் அடிக்கடி தொடர்பில் உள்ள அரசாங்கம் சாரா ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
மேலும், 12 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள பிள்ளைகள் பயிலும் துணைப்பாட, செறிவூட்டு நிலையங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வரும் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து அடிக்கடி விரைவுக் கிருமிப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.
சிங்கப்பூர் கொவிட்-19 கிருமித் தொற்றுடன் வாழப் பழகும் சூழலை நோக்கிச் செல்லும் வேளையில் கல்வி அமைச்சு பள்ளிகளில் ஏற்படும் தொற்றை நீடித்த, தாக்குப் பிடிக்கக் கூடிய அணுகுமுறையைக் கொண்டு கையாளும் என்று திரு சான் கூறினார்.
தடுப்பூசி அல்லது அடிக்கடி பரிசோதனை எனும் விதிமுறை பல பணியிடச் சூழல்களில் நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு ஏற்கெனவே கூறியிருந்தது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், தடுப்பூசியை அறவே போட்டுக் கொள்ளாதவர்கள், மருத்துவக் காரணங்களால் அதற்கு தகுதி பெறாதவர்கள் அடிக்கடி விரைவுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து வகுப்புகளுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படும் வகையில் பள்ளிகளில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் குறிப்பிட்ட அளவில் கையாளப்பட்டு வருவதாக திரு சான் கூறினார்.
கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சிங்கப்பூரின் 600,000 மாணவர்களில் 216 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டது. அவர்களில் 103 பேர் தொடக்கப்பள்ளி மாணவர்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களில் பாதி பேருக்கு மேல், தொற்று ஏற்படும் முன்னரே தனிமைப் படுத்தப்பட்டுவிட்டனர். அதாவது, அவர் களால் சக பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அதனால் அவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறிய தேவை இல்லை என்று திரு சான் கூறினார்.
மே முதல் ஜூலை வரை 50 பள்ளிகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு மாறினர். இவர்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தொற்று ஏற்படும் போது மாணவர்களுக்கும் அவர் களின் குடும்பங்களுக்கும் உண்டாகும் இடையூறைக் குறைக்க, அதிக ஊடுறுவல் இல்லாத பரிசோதனை முறைகளை கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக திரு சான் குறிப்பிட்டார்.
யார் யார் எல்லாம், எவ்வளவு காலத்துக்குப் பள்ளிக்கு வராமல் இருப்பது என்பதைத் தீர்மானிக்க வும் குறிப்பிட்ட சம்பவங்களை அணுகுமுறைக்கும் அது உதவும் என்றார் திரு சான்.