இந்து இளங்கோவன்
தாதியாக முதல் பரிமாணம். இப்போது சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரி. 2014ஆம் ஆண்டு தொடங்கி ஆறு ஆண்டுகள் சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் தாதியாக வேலை செய்து வந்த 30 வயது ஐஸ்வர்யா நேத்தாஜிக்கு சிங்கப்பூர் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை கடந்த ஆண்டு ஏற்பட்டது.
தாதியாகப் பிறருக்கு சேவை செய்கிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் செய்யும் பணியில் அவருக்கு மனநிறைவில்லாமல் இருந்தது.
தாதியாக தான் கற்றுக்கொண்ட திறன்களையும் நாட்டின் மீதான பற்றையும் ஒன்றிணைக்க சிங்கப்பூர் ராணுவத்தில் சேர முடிவெடுத்தார் ஐஸ்வர்யா.
ராணுவத்தில் பணியாற்றிய கடந்த ஓராண்டு, தன் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தைக் கொடுத்துள்ளதாக பகிர்ந்துகொண்டார். 48வது நிபுணத்துவ ஆயுதப்படை பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு அணிவகுப்பு இம்மாதம் 19ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
அதில் 1,139 நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிகளும் ராணுவ நிபுணர்களும் பயிற்சியை முடித்து பட்டம் பெறுகின்றனர். அவர்களில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் மருத்துவ நிபுணராக சேர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவும் ஒருவர்.
அவர் செயலாற்றும் படைப்பிரிவில் அவர் மட்டுமே பெண். அதுவும் அப்பிரிவில் இவர்தான் வயதில் மூத்தவர்.
இருப்பினும் தனிப்பட்ட உடற்தகுதிச் சோதனையில் சிறந்து விளங்கி தங்க விருதைப் பெற்றதோடு தம்மைவிட வயதில் குறைந்த ஆண்களைவிட சிறந்த தேர்ச்சி பெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டார் ஐஸ்வர்யா.
படையில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண், அதிலும் மற்றவர்களைவிட வயதில் மூத்தவர் என்ற தயக்கமும் பதற்றமும் ஐஸ்வர்யாவிற்கு இருந்தது. ஆனாலும் படையினர் அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சிகளின்போது தொடர்ந்து தமக்கு ஊக்கம் தந்ததாக அவர் கூறினார்.
பல உடல் வலிமைப் பயிற்சிகளில் ஆண், பெண் என்று வேறுபடுத்த முடியாத அளவிற்கு ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை புரிகிறார்கள் என்பதையும் ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.
ஒருமுறை காட்டுப்பகுதியில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கனமழை பெய்யத் தொடங்கியது. ஐஸ்வர்யாவும் அவரது பிரிவினரும் மழைக்காக ஒதுங்கி நின்ற சமயத்தில் அவரவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது ஐஸ்வர்யாவின் ராணுவப் பயணத்தில் மறக்கமுடியாது ஒரு நிகழ்வாக உள்ளது.
சோர்வாக இருந்தபோதும் பிரிவினருக்கு இடையே ஒரு நெருக்கமான பிணைப்பை அந்நாள் உருவாக்கியதாக கூறினார் ஐஸ்வர்யா.
"முதலில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற விருப்பத்தை உறவினருடன் பகிர்ந்துகொண்டபோது, 'ஏன் உன்னத துறையான தாதிமைத் துறையைக் கைவிடுகிறாய், 30 வயதில் உடலை வருத்தும் பயிற்சிகள் கடினமாக இருக்கும்' போன்ற பல கேள்விகளை எழுப்பினர்.
"இவர்களுக்கு நான் அளித்த ஒரே பதில், ராணுவத்தில் சேர்ந்து எனது முழுமையான திறமையைக் காட்டுகிறேன் என்பதுதான். என்னுடைய பெற்றோர் இன்றுவரை இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்து வந்ததால்தான் என்னால் இந்த அளவிற்கு முன்னேற்றம் காண முடிந்தது," என்றார்.
இதற்குமுன் அதிகம் உடற்பயிற்சி செய்து பழக்கம் இல்லாத ஐஸ்வர்யாவிற்கு, உடல் ரீதியான ராணுவப் பயிற்சிகள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக ஓட்டப் பயிற்சி அவருக்கு சவாலாக இருந்தது. ஆனால் கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு இறுதியில் தனிப்பட்ட உடற்தகுதி சோதனையில் தனது இலக்கை எட்டினார்.
பயிற்சிகள் முடிந்து மிகவும் சோர்வடைந்து இருக்கும்போதெல்லாம் தனது அம்மாவிற்கு குறுந்தகவல் அனுப்புவார் ஐஸ்வர்யா.
அம்மாவிடமிருந்து, "உன்னால் முடியும். நீ அடைய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது," என்ற பதில் வந்தபின்பு தனக்குள் தைரியம் மீண்டும் பிறக்கும் என்றார் இளையர் ஐஸ்வர்யா.