கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் நீடித்துவரும் நிலையில், பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டிலிருந்தே கற்கும் நடைமுறை இன்னும் நடப்பில் உள்ளது.
இது குறித்து மாணவர்களுக்கு ஏதுவான வீட்டுச் சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்று செயலில் இறங்கியது வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்.
பிறரால் பயன்படுத்தப்பட்ட நிலையிலும் நன்கு இயங்கக்கூடிய மடிக்கணினி, கைக்கணினி, திறன்பேசி, விசைப்பலகை போன்ற தொழில்நுட்பச் சாதனங்களை குடியிருப்பாளர்களிடமிருந்தும் வெவ்வேறு அமைப்புகளிடமிருந்தும் கடந்த ஜூன் மாதத்திலிருந்து மன்றம் திரட்டி வருகிறது.
வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் அலுவலக வேலை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு, திரட்டப்பட்ட இந்தச் சாதனங்கள் பின்னர் வழங்கப்படுகின்றன.
கடந்த மாதம் 10ஆம் தேதி நிலவரப்படி, 'டிஜிரெடி@நார்த் வெஸ்ட்' எனும் இந்த நன்கொடை திட்டத்திற்காக 238 தொழில்நுட்பச் சாதனங்கள் திரட்டப்பட்டு, வடமேற்கு பகுதியில் வசிக்கும் 175 குடும்பங்களைச் சென்றடைந்தன.
இத்திட்டத்தில் ஈடுபட்ட பங்காளி அமைப்புகளில் 'ஈஸ்ட் ஏசியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மன்ட்' எனும் தனியார் கல்வி நிலையமும் அடங்கும்.
"அமைப்பின் சார்பிலிருந்து, பல கணினிச் சுட்டிகளையும் (மெளஸ்) விசைப்பலகைகளையும் நன்கொடையாக வழங்கினோம்.
"ஒவ்வொரு வீட்டின் பொருளாதார நிலை வேறுபட்டிருப்பதால், இந்தச் சாதனங்களின் பயன்பாடு மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் என்று நம்பு கிறோம்," என்று கூறினார் அந்தக் கல்வி நிலையத்தில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றும் ரா.ராஜ மருது பாண்டி, 26.
ஒரு வாரம் வீட்டிலிருந்து படிப்பதாகவும் மறுவாரம் அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழக (மத்திய கல்லூரி) வகுப்புக்குச் செல்வதாகவும் தெரிவித்தார் கணக்கியல் துறையில் உயர் நைடெக் சான்றிதழ் படிப்பை மேற்கொண்டு வரும் 19 வயது மாணவி ந.தங்க அகல்யா தேவி. திட்டத்தின் மூலம் தனக்குக் கிடைத்த மடிக்கணினி, வீட்டுப்பாடங்களை நேரத்துடன் முடிப்பதற்கு உதவி புரிவதாக அவர் தெரிவித்தார்.
"வீட்டிலிருந்து கற்றலில் ஈடுபடும் அல்லது வேலை செய்யும் சூழ்நிலையில் கூடுதலான குடியிருப்பாளர்களுக்கு மடிக்கணினிகள் இத்தருணத்தில் தேவைப்படும். வீட்டில் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பச் சாதனங்கள் இருந்தால் அவற்றை மற்ற குடும்பங்களின் பயன்பாட்டுக்கு நன்கொடையாக வழங்கலாம்," என்று கேட்டுக்கொண்டார் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் திரு அலெக்ஸ் யாம்.
'டிஜிரெடி@நார்த் வெஸ்ட்' எனும் இத்திட்டத்திற்குப் பங்களிக்க விரும்புவோர், go.gov.sg/digiready என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
செய்தி: ப. பாலசுப்பிரமணியம்