காணாமற்போனதாகக் கருதப்பட்ட இரண்டாம் உலகப் போரின் சரணடைதல் ஆவணம் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் தேசியப் பொருட்களின் மத்தியில் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட இந்த ஆவணம், அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட சாங்கி வழிபாட்டுக் கூடம், அரும்பொருளகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் சரணடைவதாக ஒப்புக்கொண்டு ஜப்பானியப் படையினர் கெப்பல் துறைமுகத்தில் ஹெச் எம் எஸ் சசெக்ஸ் என்ற கப்பலில் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டனர். 1945ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதியன்று இது கையெழுத்தானது.
ஆவணம் கையெழுத்தான பிறகு சிங்கப்பூரிலும் மலேயாவிலும் அப்போதிருந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
குழப்பம் நிறைந்த போரின் கடைசி நாட்களில் ஆவணம் தொலைந்துபோனதாகக் கருதப்பட்டது.
ஆனால் இப்போது அது சிங்கப்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆவணம், ஸ்காட்லாந்தின் தேசிய அரும்பொருளகக் குழுமத்திடமிருந்து ஆறு மாதங்களுக்கு இரவல் வாங்கப்பட்டுள்ளது. நாளை, சிங்கப்பூரில் ஜப்பானியப் படையினர் சரணடைந்த நிகழ்வின் 76ஆம் ஆண்டு நிறைவு நாள். அதைச் சித்திரிக்கும் வகையில் தக்க வேளையில் ஆவணம் சிங்கப்பூரின் அரும்பொருளகத்தில் இடம்பெறுகிறது.
சிங்கப்பூரின் தேசிய அரும்பொருளகத்தின் துணைப் பொறுப்பாளராக இருக்கும் 26 வயது ரேச்சல் எங் கண்டுபிடித்ததாக சாங்கி கூட்டுப் பிரார்த்தனை, அரும்பொருளகம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் வரலாற்றுக் கல்வெட்டுகளைச் சேகரிக்க அரும்பொருளக பொறுப்பாளர்கள் மேற்கொள்ளும் ஆய்விற்கு இந்தக் கண்டுபிடிப்பு சான்று என்று அது குறிப்பிட்டது.