இர்ஷாத் முஹம்மது
ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வளர்ந்த எட்வர்ட் தாசன் ராஜேந்திரன், 26, படிக்கும்போதே தமது செலவுகளைத் தாமே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. பகுதிநேர வேலைகளைச் செய்துதான் அவர் தமது பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகக் காலங்களில் தேவைப்பட்ட போக்கு வரத்து, உணவு ஆகியவற்றுக்கான செலவுகளைப் பார்த்துகொண்டார்.
அந்நேரத்தில் இவரது இரண்டு சகோதரர்களும் இவருக்கு உறுதுணையாக இருந்தனர். சகோதரர்களின் அரவணைப்பாலும் வலுவான குடும்பப் பிணைப்பாலும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார் எட்வர்ட்.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆண்டுதோறும் வழங்கும் சிண்டா உன்னத விருதுகளை நேற்று முன்தினம் பெற்ற 749 பேரில் எட்வர்ட் ஒருவர்.
பகுதி மின்கடத்தி நிறுவனத்தில் உற்பத்தி பொறியாளராகத் தற்போது இவர் பணியாற்றுகிறார்.
கல்வி, விளையாட்டு, கலைகள் எனப் பல தளங்களில் தேர்ச்சி பெற்ற, தொடக்கநிலை முதல் பல் கலைக்கழகம் வரையில் பயிலும் மாணவர்களுக்கு சிண்டா உன்னத விருதுகள் வழங்கப்படுகின்றன.
விடாமுயற்சியுடன் தடைகளைக் கடந்து வெற்றிப் பாதையில் நடை போடும் இளையர்கள் விழாவில் அங்கீகரிக்கப்பட்டனர்.
கடின உழைப்பைக் கல்வியில் செலுத்தியபோதும் 'ஜிசிஇ' சாதாரண நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் வருத்தப்பட்டிருக்கிறார் முனாஸ்ஸா ஐன், 19.
ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை அவர். மனம் தளராமல் கடினமாக உழைத்தார். குடும்பத்தினரின் ஆதரவும் இருந்தது.
சுகாதார நிர்வாகம், மேம்பாட்டுத் துறையில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ள முனாஸ்ஸா, சிண்டாவின் உன்னத விருதைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
ஆசிரியர்கள், குடும்பத்தினரின் ஊக்குவிப்பு, தமது கடினமான உழைப்பு முதலியவை பலனளித்ததாகக் கூறும் இவர், சிண்டாவின் 'ஸ்டெப்' துணைப்பாட வகுப்புகளில் பயின்றதாகவும் கூறுகிறார்.
தொடக்கக் கல்லூரி பிரிவில் விருதுபெற்ற மாணிக்கவாசகன் அஷ்மிதா, 17, பிறப்பிலேயே மரபணு தொடர்பான ரத்தக் கசிவு குறைபாடு காரணமாக பல ஆண்டுகளாக பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஆசிரியர்கள், சக மாணவர்களின் உதவியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு இவர் வெற்றியும் அடைந்துள்ளார்.
எதிர்காலத்தில் கிருமி தொடர்பான நிபுணராக ஆகவேண்டும் என்ற பேரார்வம் கொண்டுள்ளார் ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் பயிலும் அஷ்மிதா.
நிரலிடுதல் திட்டம் உட்பட சிண்டாவின் பல திட்டங்களில் பங்குபெற்றுள்ள அஷ்மிதா, துடிப்புமிக்க தொண்டூழியரும் கூட.
உதவி தேவைப்படும் பிள்ளை களுக்குத் துணைப்பாட வகுப்புகள் நடத்துவது, 'லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ்' திட்டத்தின் மூலம் மூத்தோருடன் நட்புறவாடுவது போன்றவற்றில் இவர் சேவையாற்றி வருகிறார்.
இவ்வாண்டின் சிண்டா உன்னத விருது பெற்ற தலைமைத் தேர்ச்சியாளர் யார்ளகட்டா சாய் சூர்யா, 26, மூன்றாவது முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இவர் 'ஜிசிஇ' சாதாரண நிலை, மேல்நிலைத் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சிகளுக்காக இந்த விருதை பெற்றார்.
நீடித்த நிலைத்தன்மை முயற்சி களின் மீது அதீத ஆர்வம் கொண்ட சூர்யா, அத்துறையில் இரண்டு புத்தம் புதிய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார்.
நீடித்த நிலைத்தன்மை முயற்சி களில் புத்தாக்கத்தைத் தழுவ சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் தென்
கிழக்காசியாவிலும் சமூகத் தொழில்முனைவர்களை ஊக்குவிப்பது தமது நோக்கம் என்கிறார் சூர்யா. தலைசிறந்த தேர்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளியல், பொறியியல் துறைகளில் இரட்டை இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
"நமது தலைமுறை சந்திக்கும் நிச்சயமற்ற நிலையே ஆக்க பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த நமக்கு கிடைத்துள்ள மாபெரும் வாய்ப்பு," என்று தமது உரையில் சூர்யா குறிப்பிட்டார்.
மொத்தம் 19 பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகளை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் வழங்கினார்.