குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுய ராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு
கொண்டேன்
நாராய ணாவென்னும் நாமம்”
என திருமங்கையாழ்வார், நாராயணா எனும் நாமத்தை உரைப்பவர்களுக்கு உயர்ந்த பண்புகள், செல்வம், வளம், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நலன்களையும் பெற்ற தாயினைப் போன்ற பரிவுடன் பெருமாள் கொடுப்பார் என்கிறார். நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரங்களைப் பாடியுள்ள திருமங்கையாழ்வாரின் இந்த பாசுரம் நாராயண நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கிறது.
ஸ்ரீ நாராயணன் சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கடந்த 1978ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது.
சிங்கப்பூரின் இருபெரும் ஆன்மீக நிகழ்வு களான தீமிதித் திருவிழாவும் தைப்பூசத் திருவிழாவும் இந்த ஆலயத்தில் இருந்து தொடங்குவது வழக்கம்.
பெருமாள் கோயிலில் வைணவ திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இதில் முக்கியமானவை, புரட்டாசி மஹோட்சவம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, பவித்ர உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டலஷ்மி மகாயாகம், மார்கழியில் ஆண்டாள் வழிபாடு முதலியவையாகும்.
இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் புரட்டாசி மாத வழிபாடு. இம்மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை பல்லாயிரக்கணக் கான பக்தர்களும் பெருமாளை வணங்கி அன்னதானத்தில் பங்கேற்று செல்வார்கள்.
கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு, இதில் 50 விழுக்காட்டு பக்தர்களே பெருமாளை வழிபட்டனர். இந்தாண்டு சுமார் 16,000 பேர் பெருமாளை வழிபட வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புரட்டாசி மாத சிறப்புப் பூசைகள்
தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக புரட்டாசி மாதம், தெய்வீகத் தன்மை நிறைந்த மாதமாகவும் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகின்றது.
இவ்வாண்டின் புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளும், மூன்று ஏகாதசியும் வருவது மிகச் சிறப்பானதாகும்.
இவ்வாண்டு நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் இந்த மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றன.
இம்மாதம் முழுவதும், வழக்கமான நித்திய பூசைகளுடன் சுப்ரபாதம் தொடங்கி, தோமாலை சேவை, மூன்று கால விஷ்ணு ஹோமம், ஏகாந்த சேவை என பல சிறப்புச் சேவைகளும் நடைபெறும்.
சனிக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் பெருமாள் திருமஞ்சனமும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.
வியாழக்கிழமைகளில் கூடுதலாக நேத்ர சேவை, பூலங்கி சேவையுடன் இந்தாண்டு புதிதாக முத்தங்கி சேவையும் நடைபெறவுள்ளது. ஆண்டின் ஓரிரண்டு முக்கிய நாட்களில் மட்டும் நடக்கும் கோ பூஜை புரட்டாசியில் எல்லா சனிக்கிழமைகளிலும் நடைபெறும். அன்றைய நாளில் நடைபெறும் மகேஸ்வர பூஜை சிறப்பு வாய்ந்தது.
சனிக்கிழமைகளில் காலையும் மாலையும் புரட்டாசி உபய பூஜையும் காலையில் முத்தங்கி சேவையும் உண்டு.
மேலும் கடைசி சனிக்கிழமையன்று விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையும், 1,008 தாமரை சமர்ப்பண பூஜையும் நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் காலையில் நடைபெறும் சுப்ரபாத வழிபாட்டில் கலந்துகொள்ள பக்தர்கள் கண்டிப்பாக https://bit.ly/subrapathamslots என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சுப்ரபாத வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். அடுத்த சனிக்கிழமைக்கான முன்பதிவு முந்தைய ஞாயிற்றுக்கிழமையே தொடங்கிவிடும். வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையே இருப்பதால் விரைந்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் காலை மணி 6:45 முதல் திருமஞ்சனச் சேவையையும் புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை மணி 6:00 முதல் சுப்ரபாதச் சேவையையும் https://www.facebook.com/hinduendowmentsboard மற்றும் https://m.youtube.com/c/HinduEndowmentsBoard என்ற ஃபேஸ்புக், யூடியூப் சமூக வலைத்தளங்களில் நேரலையில் காணலாம்.
இம்மாதம் முழுவதும் பெருமாளின் மகிமைகளைக் கூறும் காணொளி நாள்தோறும் காலை மேலே உள்ள இந்து அறக்கட்டளை வாரிய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வாட்ஸ்அப் செயலி மூலமும் பக்தர்களுக்கு அனுப்பப்படும்.
மகேஸ்வர பூஜை
புரட்டாசி மாதத்தின் சிறப்பம்சம், சனிக்கிழமையன்று நடைபெறும் ‘மகேஸ்வர பூஜை’ ஆகும். அன்று சுமார் 25,000 பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களின் வடிவில் பெருமாளே பிரசாதத்தைப் பெற்று உட்கொள்கிறார் என்பது நம்பிக்கை.
கிருமித்தொற்றுப் பரவலுக்கு முன்பு மதியம் சுமார் 12,000 பக்தர்களுக்கு வாழை இலையில் அறுசுவை உணவு பரி மாறப்படும். பிறகு இரவும் சுமார் 13,000 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
கிருமித்தொற்றுப் பரவலுக்கு இடையேயும் கடந்தாண்டு சனிக்கிழமைகளில் சுமார் 12,000 பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டது. இந்தாண்டு மதியம் 8,000 உணவுப் பொட்டலங்களும் இரவு 8,000 உணவுப் பொட்டலங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
சனிக்கிழமைகளில் காலை மணி 8:30 முதல் மதியம் மணி 1:00 வரை உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும். மாலை மணி 6:00 முதல் இரவு மணி 9:30 வரை உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும். பக்தர்கள் அனைவருக்கும் இறைவனின் பிரசாதம் கிடைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடைமுறை காரணமாக பக்தர்கள் உணவைப் பெற்று வீட்டிற்கு எடுத்துச்சென்று உட்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்களின் அன்பான ஆதரவையும் புரிதலையும் நல்குகிறோம். மேலும் விவரங்களுக்கு 62985771 என்ற எண்ணில் கோயிலைத் தொடர்பு கொள்ளலாம்.
பின் குறிப்பு: கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அரசின் அறிவிப்புகளுக்கு ஏற்ப நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.
புரட்டாசி விழா குறித்த அண்மைய தகவலுக்கு https://heb.org.sg/sspt/ என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்
கோயில் திறந்திருக்கும் நேரம்
புரட்டாசி மாதம் முழுவதும்
காலை 8.30 மணி முதல் பகல் 11.45 மணி வரையும்; மாலை 6.00 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
கூடுதலாக, சனிக்கிழமைகளில் பகல் 12.45 மணி வரையும் இரவு 9.15 மணி வரையும் திறந்திருக்கும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க, உச்ச நேரமான சனிக்கிழமை காலை 11.30க்குப் பிறகும் மாலை 7.30க்குப் பிறகும் வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறு பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வெள்ளி பகல் 1.00 மணி முதல் ஞாயிறு காலை 8.30 மணி வரை கோயில் வளாக வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருக்கும்.
வெய்யில், மழையினால் பாதிப்பு ஏற்படாத வகையில் கூடாரம் போடப்பட்டு பக்தர்களின் வழிபாட்டிற்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு, கண்ணைக் கவரும் வண்ணத் தோரணங்கள், வெல்வெட் துணிகளாலான அழகு வளைவுகள், வாயில்கள், பூக்கள், தூண்கள் முதலியவை சன்னதிகளையும் அலங்கரிக்கின்றன.
கோயிலின் உட்புறமும் வெளிப்புற மும் மின்னொளியில் மிளிரும் வண்ணம் பலவண்ண மின்விளக்கு களால் ஒளியூட்டப்பட்டிருக்கின்றன.
கொவிட்-19 கட்டுப்பாடுகள்
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகாரணமாகக் குறிப்பிட்ட நேரத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.
சனிக்கிழமைகளில் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்கள், நிகழ்ச்சிக்கு முன்பே பரிசோதனை மூலம் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்திருப்போருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
கிருமித்தொற்று காரணமாக எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பக்தர்கள் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மேலாண்மைக் குழுவும் 300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் உதவியுடன் புரட்டாசி விழா ஏற்பாடு களை விமரிசையாகச் செய்துள்ளன.
செய்தி: தாம் சண்முகம்