தனியார் வீட்டு விலைகள் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக கணிசமான அளவில் உயர்ந்திருப்பதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை-செப்டம்பர் மூன்றாம் காலாண்டில் இதன் விலைகள் 0.9 விழுக்காடு விலைகள் ஏறின. இந்த ஏற்றம் அதற்கு முந்திய காலாண்டில் 0.8 விழுக்காடாகவும் முதல் காலாண்டில் 3.3 விழுக்காடாகவும் இருந்தது என நேற்று வெளியிடப்பட்ட ஆணையத்தின் மதிப்பீடுகள் குறிப்பிட்டன.
அதேநேரம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் தனியார் வீட்டு விலைகள் 7.3 விழுக்காடு உயர்ந்துள்ளன.
குறிப்பாக இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 5.1 விழுக்காடு என விலைகள் உயர்ந்து உள்ளன. இது கடந்த ஆண்டு முழுமைக்கும் இந்த விகிதம் 2.2 விழுக்காடாக இருந்தது.
தரைவீடுகளின் விலைகள் மூன்றாம் காலாண்டில் 2.5 விழுக்காடு ஏற்றம் கண்டதாகவும் இதற்கு முந்திய காலாண்டில் இது 0.3 விழுக்காடு சரிந்திருந்ததாகவும் ஆணையத்தின் தரவுகள் தெரிவித்தன.