முடக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு அப்பால் சிங்கப்பூர் செல்லத் தொடங்கிவிட்டது என்றும் அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கையைக் கண்டு பொதுமக்கள் பயமோ பதற்றமோ அடையத் தேவை இல்லை என்றும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். அண்மையில் சமூக அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முடக்கநிலையை அறிவிக்கக் கோரி சிலர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகும் தொற்று எண்ணிக்கை மிகவும் கவலைக்குரியது என்பதை அறிவேன். பலதரப்பட்ட மக்கள் இருவகையான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்; முடக்க நிலை யை அறிவியுங்கள் என்கிறார்கள் ஒருசாரார். அதேநேரம், இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்,” என்றார் திரு வோங்.