வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் வசிப்போருக்கு கொவிட்-19 நடவடிக்கைகள் திருத்தப்பட்டு இருக்கின்றன.
அறிகுறிகள் வெளியே தெரிகின்ற, மருத்துவப் பராமரிப்பு தேவைப்படக்கூடிய ஊழியர்கள் மீது இனி ஒருமித்த கவனம் செலுத்தப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 எளிமையான, விரைவுப் பரிசோதனைகளை வேகமாக நடத்தவும் தடமறிவதை இன்னும் செம்மையாக்கவும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள, தொற்று அறிகுறி தெரியாத ஊழியர்கள் தங்கள் விடுதிகளிலேயே குணமடைய செய்யவும் இந்தத் திருத் தங்கள் வழிவகுக்கும்.
ஊழியர்களின் வாழ்வுக்கும் வேலைக்கும் ஏற்படக்கூடிய தொல்லைகளைக் குறைத்துக்கொள்ளும் நோக்கத்தில் புதிய திருத்தங்கள் இடம்பெறுகின்றன என்று அமைச்சு குறிப்பிட்டது.
விடுதிகளில் கடந்த சில நாட்களாக நாளுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை நேற்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு கூட்டத்தில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் கிருமி தொற்றியோரில் பெரும்பாலானவர்களுக்குப் பாதிப்பு குறைவாக இருக்கிறது. அறிகுறி எதுவும் தெரியவில்லை.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய தேவை இல்லை. உயிர்வாயு சிகிச்சையும் தேவையில்லை. சொந்தமாகவே, விரைவாக குணமடையும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
தங்குவிடுதி ஊழியர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு முற்றிலும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
500வரைப்பட்ட விடுதி ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கும் வாராந்திர முன்னோடி செயல்திட்டம் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.