சிறப்பு வசதிகள் கொண்ட இரண்டு புதிய பலதுறை மருந்தகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
128 படுக்கைகள் கொண்ட காலாங் பலதுறை மருந்தகத்தில் நீடித்த நோய் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களைக் கவனித்துக்கொள்ள இந்த பிரிவு உதவும்.
365 படுக்கைகள் கொண்ட புதிய புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகம் தாதிமை இல்லம் ஒன்றை உள்ளடக்கியுள்ளது.
மூத்தோர் பராமரிப்பு நிலையம் ஒன்றை உள்ளடக்கிய பலதுறை மருந்தகம் யூனோஸில் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளது.
"சுகாதார, சமூக வசதிகளை (விளையாட்டு நிலையங்கள்) உள்ளடக்கி பலதுறை மருந்தகங்களை அமைப்பது மக்களுக்கு முழுமையான பராமரிப்பு வழங்கி, அவர்களது சுகாதார நிலையை உயர்த்தும்," என புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகத்தின் அதிகாரபூர்வ திறப்புக்கு வந்திருந்த சுகாதார அமைச்சர் கூறினார்.
இது குறித்து விவரித்த அமைச்சர் செம்பவாங் பலதுறை மருந்தகத்தைச் சுட்டினார். அது புக்கிட் கேன்பெரா என்ற பெயர் கொண்ட சமூக மையமாக மாற்றம் காணவிருக்கிறது. அதில் நீச்சல் குளம், உள்ளரங்கு விளையாட்டு மண்டபம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற விளையாட்டு வசதிகளும் ஒரு பூங்காவும் உணவங்காடி நிலையமும் இடம்பெறும். 2030க்குள் புக்கிட் மேரா, ஊட்ரம் பலதுறை மருந்தகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிக இட வசதியைக் கொண்ட மருந்தகமாக தியோங் பாருவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இந்த மருந்தகம் குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக மூத்தோருக்குத் தோதான வசதிகளைக் கொண்டு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
சுகாதார அமைச்சின் விரிவாக்கத் திட்டத்தின்படி அடுத்த ஒன்பது ஆண்டுகளில் ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட மேலும் ஒன்பது பலதுறை மருந்தகங்கள் திறக்கப்படும்.
2030க்குள் பலதுறை மருந்தகங்களின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிக்கும். மூப்படையும் மக்கள் தொகையையும் அதோடு இயல்பாகவே ஒன்றுசேர்ந்து அதிகரிக்கரித்து வரும் நாட்பட்ட நோய்களின் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் எதிர்கொண்டு வருகிறோம் என்றும் அதனால் மருத்துவ பராமரிப்பை சமூகத்தில் அடிப்படை பராமரிப்பு நிலைக்கு உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புக்கிட் பாஞ்சாங்
பலதுறை மருந்தகம்
புக்கிட் பாஞ்சாங்கில் நேற்று திறக்கப்பட்டுள்ள புதிய பலதுறை மருந்தகம், அங்கு வசிப்போர் எளிதில் சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். மூன்று மாடிகள் 5,847 சதுர அடிகள் கொண்டு புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகம், ஒரு தாதிமை இல்லத்தையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த பலதுறை மருந்தகத்த்தை ஒரு நாளிற்கு ஏறத்தாழ 600 நோயாளிகள் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், தாதிகளும் மற்றவர்களும் பணியாற்றும் புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகத்தில் தொடர்ந்து பணியமர்த்தல் நடைபெறுகிறது என அதன் தலைமை அதிகாரி டாக்டர் டான் கிம் கியட் கூறினார். மருத்துவச் சேவை வழங்குதல் தவிர அங்கு மகளிர், சிறார் சுகாதாரச் சேவைகளும் பல் மருத்துவ சேவையும் வழங்கப்படும்.
மேலும், மனநல சேவை, ஃபிசியோதெரப்பி போன்ற துணை சுகாதார சேவைகளும் வழங்கப்படும். புக்கிட் பாஞ்சாங், காலாங் பலதுறை மருந்தகங்களுடன் சிங்கப்பூரில் தற்போது 22 பலதுறை மருந்தகங்கள் உள்ளன.