எரிசக்தி விலைகளின் ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க எரிசக்தி ஆற்றல் திட்ட நடவடிக்கைகளில் வர்த்தகங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற 7வது தேசிய எரிசக்தி ஆற்றல் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார்.
"தொடக்கத்தில் செலவுபிடிப்பதாக இருப்பினும் போகப்போக எரிசக்தி ஆற்றல் திட்டங்களின் பலனை அனுபவிக்க முடியும். இதற்கான நடைமுறைச் செலவு நாளடைவில் குறையும்.
"நிலைத்தன்மை, வளர்ச்சி முன்னுரைப்பு ஆகியவற்றைச் சார்ந்தே வர்த்தக வளம் உள்ளது. எரிசக்தி ஆற்றல் திட்டங்கள் உலகளவிலான எரிசக்திச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறங்களால் ஏற்படும் வர்த்தக அபாயங்
களைக் குறைக்கும்," என்றார் திருவாட்டி ஃபூ.
முதல்முறையாக இணையம் வழி நடத்தப்பட்ட இந்த இருநாள் மாநாடு, எரிசக்தி ஆற்றலைக் கூட்டுவதன் மூலம் செலவுகளையும் கரியமில வாயு வெளியேற்றத்தையும் நிறுவனங்கள் எவ்வாறு குறைக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறது.
உலக அளவில், நிறுவனங்களும் குடிமக்களும் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை ஏற்றத்தைச் சமாளிக்கப் போராடி வருகிறார்கள். புதிய எரிசக்தியை நோக்கி உலகம் செல்லத் தொடங்கினாலும் இன்றளவில் பழைய முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுவதே தற்போதைய விலை ஏற்றத்திற்குக் காரணம் என்று புளூம்பெர்க் ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.