போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 17 வயது இளையர் மாண்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்ட சூழல் பற்றிய மறுஆய்வு நடைபெற்று வருகிறது.
ஜஸ்டின் லீ, மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி களால் பிப்ரவரி 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த மாதம் 16ஆம் தேதி அந்த இளையர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகக் கூறப்பட்டது.
இளையர் லீயின் தாயார் திருவாட்டி சிசிலியா ஆவ், 51, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துக்கு அனுப்பிய கடிதத்தைக் கடந்த செவ்வாய் அன்று தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார். தமது மகன் தவறு செய்ததை மறுக்கவில்லை என்றபோதும் அவர் நடத்தப்பட்ட விதம் மாறவேண்டும் என்ற திருவாட்டி ஆவ், சில பரிந்துரைகளை முன்வைத்தார்.
திருவாட்டி ஆவ்வின் மகன் இறந்த செய்தி தெரிந்தவுடன் அவருடன் மூத்த அதிகாரிகள் தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று முன்தினம் கூறியது.
முழு புலனாய்வு செய்யப்படும் என்றும் அவற்றின் முடிவுகள் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் திருவாட்டி ஆவ்விடம் கூறப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
கடிதம் கிடைத்த அன்றே திரு சண்முகம் திருவாட்டி ஆவ்வைத் தொடர்புகொண்டு அவரது மகனின் கைது பற்றி புலனாய்வு செய்யப்படும் என்று உறுதி அளித்தார் என்றும் கூறப்பட்டது.
உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களின் தொடர்பு விவரமும் அவரிடம் அளிக்கப்பட்டது.