பொருள் சேவை வரியை உயர்த்து வதற்கான நேரத்தைத் தீர்மானிப்
பதற்கு முன்பு, ஒட்டுமொத்த
பொருளியல்நிலை கருத்தில் கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
பொருள் சேவை வரி ஏற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து உணர்வர் என்றும் குறைந்த வருமானம்
ஈட்டுவோர் பத்து ஆண்டுகள் கழித்து உணர்வர் என்றும் அவர் கூறினார். இதற்குத் தேவையான சலுகைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
"மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் பொருள், சேவை வரி தனித்துவம் வாய்ந்தது. எங்கள் பொருள் சேவை வரித் திட்டம் பல சலுகைகளைக் கொண்டுள்ளது.
"இதன் காரணமாக குறைந்த வருமான, நடுத்தரக் குடும்பங்கள் வரி அதிகரிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள்," என்று திரு வோங் கூறினார்.
பொருள் சேவை வரியை ஏழு விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் அடுத்த ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 சூழல் நிலவி வரும் நிலையில், எதிர்ப்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே பொருள் சேவை வரி உயர்த்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருப்பதை அடுத்து, அதுகுறித்து பல கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
வரி ஏற்றத்தைப் பணவீக்கம் எவ்வாறு தாமதப்படுத்தும் என்று கலந்துரையாடலின்போது அமைச்சர் வோங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
நிலைமையை அரசாங்கம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக திரு வோங் தெரிவித்தார்.
ஆனால் தீர்மானிக்கப்பட்டுள்ள காலகட்டத்திற்குள் பொருள் சேவை வரியை உயர்த்தியே ஆக வேண்டும் என அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர் மறுஉறுதி செய்தார். பொருள் சேவை வரி ஏற்றத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க $6 பில்லியன் பெறுமானமுள்ள தொகுப்புத் திட்டத்தை அரசாங்கம் கடந்த ஆண்டு அறிவித்தது.
அதுமட்டுமல்லாது, குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் நிரந்தரப் பொருள் சேவை வரி
பற்றுச்சீட்டுகளை மேம்படுத்த
திட்டம் கொண்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.