பணியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடாகவும் ஊதிய நிலுவைத்தொகையாகவும் $13 மில்லியன் மீட்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 4,556 ஊழியர்களில் ஏறக்குறைய 93 விழுக்காட்டினர், தங்களுக்குச் சேரவேண்டிய சம்பளத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டுவிட்டதாக முத்தரப்புக் கூட்டணி இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.
சச்சரவு தீர்வுக்கான முத்தரப்புக் கூட்டணி, இணையம் மற்றும் தொலைபேசி மூலமாக சமரசப் பணியில் ஈடுபட்டது.
ஆட்குறைப்பில் ஈடுபட்ட முதலாளிகளோடும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
ஊதியம் தர இயலாத முதலாளிகளிடம் வேலை செய்த, குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவும் குறுகியகால நிவாரணத் திட்டத்தையும் அது நடைமுறைப்படுத்தியது.
அந்த உதவிக்குத் தகுதிபெறும் ஊழியரணி விகிதம், 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு உட்பட முத்தரப்புத் தரநிலைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றை 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளன.