ஆகாயப் படையில் சாதாரண நிலை தேசிய சேவையாளராக இருக்கும் மாதேஷ் கண்ணனை வீட்டில் பயன்படுத்தப்படும் ஏதாவது ஒரு பொருள் உடைந்துவிட்டால் அதைச் சரிசெய்ய அதை செப்பனிடுவதில் தேர்ச்சி பெற்ற ஒருவரைக் கூப்பிடாமல் மாதேஷின் பெற்றோர் அவரிடமே அந்தப் பணியை ஒப்படைப்பர்.
மாதேஷின் கைப்பொருள் திறனைக் கண்டு வியந்த அவரது தகப்பனார், மாதேஷ் 17 வயது எட்டியதும், அவரை தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆகாயத் துறை தொழில்நுட்ப கல்வித் திட்டத்தில் பதிந்துகொள்ளுமாறு ஊக்கம் தந்தார்.
அந்தக் கல்வித் திட்டத்தின் பாடம் தமக்கு பரிச்சயமில்லாததால் தொடக்கத்தில் சிரமப்பட்டார் மாதேஷ். பின்னர், அதில் ஈடுபாடு கொண்டு சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் புதிய வேலை, கல்வித் திட்டத்தில் பதிந்துகொண்டார்.
இந்த இரண்டரை ஆண்டு திட்டத்தை நேற்று அறிவித்த தற்காப்பு அமைச்சு, இந்தத் திட்டம் ஆகாயப் படையில் தேசிய சேவையாற்றும் தொழில்நுட்பர்களுக்கு கல்வி அங்கீகாரம் கிடைக்க ஒரு வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்தார்.
இவர்கள் சிங்கப்பூரின் தற்காப்புக்கு பங்களிக்கும் அதேவேளையில் ஆகாய பொறியியல் துறையில் பட்டயம் பெற முடியும் என்று கூறினார்.
மாதேஷ் போன்று 20 பேர் இன்று முதல் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வார நாட்களில் கல்வி கற்று பட்டயம் பெறும் வாய்ப்பைப் பெறுவர் என்று அமைச்சு விளக்கியது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வழங்கும் இந்தக் கல்வித் திட்டத்தில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஆகாயத் துறை தொடர்பான தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தக் கல்வித் திட்டத்தில் பங்கேற்போர் முதலில் இரண்டு் பாடத் திட்டங்களை முடித்து வேலை, கல்விச் சான்றிதழைப் பெறுவர். பின்னர், இதுபோல் மேலும் மூன்று பாடத் திட்டங்களை முடித்தபின் விமானத் துறையில் பட்டயம் பெறுவர்.
இவ்வாறு பட்டயம் பெற்றபின் அவர்கள் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் நான்காண்டு ஒப்பந்தத்தின்படி மேலும் ஓர் ஆண்டு ஆகாயப் படையில் சேவையாற்ற வேண்டும்.
இதுபற்றிக் கூறும் மாதேஷ், "எனது தேர்வு முடிவுகள் நன்றாக இருந்ததால், இந்தத் திட்டத்தில் சேரும்படி எனது தொழில்நுட்பக் கல்விக் கழக விரிவுரையாளர் ஆலோசனை வழங்கினார். அதனால், இதில் பதிந்துகொள்வது தொடர்பாக முடிவு எடுப்பது எனக்கு எளிதான ஒன்றாக இருந்தது. இந்தப் புதிய கல்வித் திட்டத்தில் ஒருவராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்," என்று கூறினார்.