தீபாவளி நெருங்கிட வேலையிடங்களிலும் இல்லங்களிலும் கொண்டாட்ட உணர்வு களைகட்டிவிடும். ஒன்றுகூடலுக்குத் தயாராகும் வகையில் இந்திய உணவகங்களுக்கும் 'கேட்டரிங்' நிறுவனங்களுக்கும் ஏகப்பட்ட 'ஆர்டர்'கள் வந்து குவியும்.
அவை அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியாத பட்சத்தில் தீபவாளிக்குச் சில நாட்கள் முன்னரே காலக்கெடு வைத்து ஆர்டர்களை உணவகங்களும் நிறுவனங்களும் நிறுத்திவிடும்.
ஆனால் இம்முறை கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கமும் அதனால் வந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும்
உணவுத் துறைக்கு பரிட்சையாக வந்து நிற்கிறது.
ப. பாலசுப்பிரமணியம்
இந்திய உணவகங்கள் நேரடி, வீட்டு விநியோகச் சேவையை நம்பி வர்த்தகத்தை நடத்தவேண்டிய கட்டாயம் உள்ள காலம் இது.
தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு சைவ, அசைவ உணவுப்பட்டியல்களை உருவாக்கி வீட்டு விநியோகச் சேவை அல்லது கேட்டரிங் சேவையை அவை விளம்பரப்படுத்துவது வழக்கம்.
இம்முறை அதற்கான வரவேற்பு மந்தமாகவே இருக்கிறது.
"தீபாவளியைத் தொடர்ந்து முதல் இரண்டு வாரஇறுதி நாட்களில் அதிக ஆர்டர்கள் வரும். இச்சமயம் உணவகத்தின் முக்கிய சமையல் வல்லுநர்கள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இன்னும் திரும்பவில்லை. தற்போது அதிகபட்சமாக நாளுக்கு இரண்டு விருந்தினர்கள் மட்டுமே வீடுகளுக்கு அனுமதிக்கப்படுவதால், வியாபாரத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள் ளது," என்று கூறினார் சகுந்தலாஸ் உணவகத்தின் உரிமையாளர் திருமதி சரஸ்வதி.
தீபாவளி வருவதற்கு முன், பள்ளிகள், அரசாங்க அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் 'பெண்டோ செட்'கள் அல்லது கேட்டரிங் சேவைக்காக அதிகம் நாடும்போக்கு இவ்வாண்டு காணவில்லை.
ஏனெனில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தற்போது நடப்பில் உள்ளது என்று திருமதி சரஸ்வதி சொன்னார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டைக் காட்டிலும் விற்பனை சுமாராகத்தான் உள்ளதாகக் கூறினார் 'தி பனானா லீஃப் அப்போலோ' உணவகத்தின் உரிமையாளர் திரு சி.சங்கரநாதன்.
இவ்வாண்டு மொத்த குடும்ப நபர் எண்ணிக்கைகளில் வாடிக்கையாளர்கள் தீபாவளிச் சிறப்பு உணவு 'பெண்டோ செட்'களுக்கு ஆர்டர் செய்து வருவதாகக் கூறிய காயத்ரி உணவகத்தின் இயக்குநர் திரு ச.மகேந்திரன், கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு ஆர்டர்கள் கூடியுள்ளது என்று பகிர்ந்துகொண்டார்.
கடந்த 25 ஆண்டுகளாக சுபநிகழ்வுகளுக்கும் பண்டிகைக் காலத்திற்கும் உணவு வழங்கி வருகிறது 'சேமிஸ் கேட்டரிங்' நிறுவனம்.
"இம்முறை தீபாவளிச் சிறப்பு உணவுப்பட்டியல் வெளியிட்டதிலிருந்து பலரும் தம்மிடம் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினாலும் ஆர்டர்கள் போதிய அளவில் இல்லை என அதன் இயக்குநர்களில் ஒருவரான திருமதி ப. தீபாஷினி கூறினார்.
பிரபல உள்ளூர் சமையல் வல்லுநர் திரு எஸ்.ஆர். பாலா நடத்தும் 'எக்ஸ் எம்பயர் குசின்' கேட்டரிங் நிறுவனத்திற்கு இது சிக்கலான காலகட்டம்.
"கடந்த ஆண்டைக் காட்டிலும், தீபாவளி ஆர்டர்கள் 70% சரிந்துள்ளது," என்று கூறினார் திரு பாலா. தீபாவளி அன்று வீடுகளில் 'புஃப்பே' ஏற்பாடு செய்ய முடியாத வருத்தம் இவரைப் போன்ற கேட்டரிங் நிறுவனங்களுக்கு ஒரு மனக்குறை.
"இந்த ஆண்டு தீபாவளிக்காக சிறப்பு உணவுப் பட்டியலை வெளியிட எண்ணம் இல்லை. குறைவான எண்ணிக்கையில் சமைத்து விநியோகம் செய்வது எங்களுக்குக் கட்டுப்படியாகாது. கொவிட்-19 கிருமித்தொற்று வருவதற்கு முன், தீபாவளி நேரத்தில் கிட்டத்தட்ட 60 நிகழ்ச்சிகளுக்கு மேல் கேட்டரிங் ஆர்டர்கள் வரும்," என்று நினைவுகூர்ந்தார் 'ஸ்பிரிங்லீவ் பிராட்டா பிளேஸ்' உரிமையாளர் திரு எஸ்.வி.குணாளன்.
கேட்டரிங் தொழிலில் முழுமையாக இருப்பவர்களுக்கு பாதிப்பு இன்னும் அதிகம் என்று விளக்கிய திரு குணாளன், அரசாங்கத்திடமிருந்து கிடைத்துவரும் நிதி ஆதரவு தற்போதைய சூழ்நிலையில் உதவியாக உள்ளது என்றார்.
கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, மூன்று, நான்கு, ஐந்து பேர் வரை என குடும்ப நபர் எண்ணிக்கைக்கு அளவிலான தீபாவளி உணவுப்பட்டியலை இம்முறை உருவாக்கியுள்ளது நந்தனாஸ் உணவகம்.
நந்தனாஸ் உணவக உரிமையாளர் திரு ரா.சிவவடிவேல், தீபாவளி அன்று குறைந்த எண்ணிக்கையில் உணவு விநியோகம் செய்தாலும் வீட்டில் பண்டிகை நாளன்று சமைக்காது உணவு தங்களைத் தேடி வரும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது முக்கியம் என்று சொன்னார்.
தீபாவளி அன்று தமது உணவகங் களுக்கு அருகில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து உணவைப் பெற்றுக்கொள்வதையும் நந்தனாஸ் உணவகம் ஊக்குவிக்கிறது.