திருடிய வாகனத்தை ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்ற 19 வயது ஆடவர் ஒருவரை நிறுத்த முயன்றபோது நேற்று முன்தினம் ஐந்து போலிசாருக்கு காயம் ஏற்பட்டது.
அச்சம்பவம் பற்றி போலிசார் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினர்.
வாகனம் ஒன்று திருடப்பட்டிருப்பதாக அக்டோபர் 30ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
காரை மற்றவர்களுடன் பகிரும் சேவைகளில் ஈடுபட்ட 22 வயது ஆடவர் அது பற்றி தகவல் அளித்திருந்தார்.
காரில் இருந்த மற்ற இரண்டு பயணிகளுக்காக இந்த ஆடவர் சிகரெட்டுகளை வாங்கக் கீழே இறங்கியபோது அந்த இருவரும் காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு, களவாடப்பட்ட வாகனம், அடையாளம் குறிப்பிடப்படாத போலிஸ் வாகனத்தையும் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனையும் மோதிவிட்டு வேகமாகச் சென்று விட்டது.
காரை அப்போது ஓட்டிய 19 வயது ஆடவர், போலிஸ் புகைப் படக் கருவிகளின் உதவியுடன் ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் பிடிபட்டார்.
அவரிடமிருந்து மற்றவர்களைச் செயலிழக்க வைக்கும் 'ஸ்டன்' கருவி கைப்பற்றப்பட்டது.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, அங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள கார் நிறுத்துமிடத்தில் களவாடப்பட்ட வாகனம் இருந்தை போலிசார் கண்டனர். அதைத் திருடிச் சென்ற மற்ற 19 வயது ஆடவர் இப்போது அதை ஓட்டிக்கொண்டிருந்தார். அவருடன் இன்னொரு ஆண் பயணி இருந்தார்.
காரை விட்டு வெளியேறும்படி போலிசார் கூறியபோது, ஓட்டுநர் வேகமாக காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.
அதில் மூன்று போலிஸ் அதிகாரிகள் விழுந்ததில் அவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
தப்பிச் சென்ற காரை அடையாளம் குறிப்பிடாத போலிஸ் வாகனம் துரத்திச் சென்றது.
தப்ப முயன்ற கார், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார் களையும் துரத்திச் சென்ற போலிஸ் காரையும் மோதியது. அதில் இரண்டு அதிகாரிகளுக்குக் காயம் ஏற்பட்டது.
இறுதியில் லெண்டோர் பிளேன்ஸ் பகுதியில் வாகனத்தைப் போலிசார் பிடித்தனர். வாகனத்தில் பட்டாக்கத்தி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
ஓட்டுநரும் பயணியும் கைது செய்யப்பட்டனர். போலிசாருக்கு சிராய்ப்புக் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் ஏற்பட்டன.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
காரைக் களவாடிய இரண்டு 19 வயது ஆடவர்களான காயஸ் சான் ஜிங் காய், லக்ஷன் சரவணன் மீதும் பொது நோக்கத்துடன் வாகனத்தைத் திருடியதன் தொடர்பில் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
திருட்டுச் சம்பவத்தில் தொடர்பிருந்த சந்தேகத்தின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
வேறு காரிலிருந்து பதிவு எண் பலகையை திருடியதாக லக்ஷன் மீது வேறு ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.