கி.ஜனார்த்தனன்
இந்த தீபாவளிக் கொண்டாட்டம் இதுவரை அனுபவித்திராத மன மகிழ்ச்சியையும் நம்பிக்கை உணர்வையும் 33 வயது திருமதி அனிதா பிரவீனுக்கு கொண்டு வந்துள்ளது.
பிரிந்திருந்த மகனைத் தூக்கிக் கொஞ்ச முடிந்த மகிழ்ச்சி ஒரு புறம், முனைவர் பட்டம் பெற்ற பெருமை மறுபுறம். மகனோடு இணைந்த தாயாகவும் முனைவர் பட்டதாரியாகவும் உற்சாகத்துடன் தீபமேற்றி இந்தத் தீபாவளியை அவர் கொண்டாடுகிறார்.
ஒரே வீட்டில் இருந்தும் ஸூம் செயலி மூலமாக மகனுடன் உரையாட வேண்டியநிலை. கொவிட்-19 கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்ட அனிதாவுக்கு நோயின் தாக்கங் களைவிட மகனைப் பிரிந்திருந்தது அதிக மனவலியைத் தந்தது.
தீபாவளிக்காவது ஒரு வயது செல்ல மகனைத் தூக்கிக் கொஞ்சு வோமா, அவனுடன் புத்தாடை அணிந்து பண்டிகையைக் கொண்டாடுவோமா என்ற குழப்பம் நிறைந்த நாட்கள் அவை.
"வாந்தி, சளி, காய்ச்சல் என்று நோயுடன் 10 நாட்கள் தனியாக அறைக்குள் அடைத்துக்கொண்டு இருந்ததைவிட என் மகனைத் தூக்கி அவனுக்கு உணவூட்ட முடியாதது சிரமமாக இருந்தது," என்றார் அவர்.
சென்ற அக்டேபார் 14ஆம் தேதியன்று அவருக்கு சளியும் காய்ச்சலும் ஏற்பட்டது. மறுநாள் ஏஆர்டி, பிசிஆர் கிருமிப் பரிசோதனை செய்தபோது, கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது.
"வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவரின் மூலம் கிருமி தொற்றியது. மகனைப் பற்றிய கவலைதான் முக்கியமாக இருந்தது," என்றார் அனிதாவின் கணவர் 32 வயது திரு பிரவீன் செல்வம்.
திரு பிரவீன், அவரது மகன் விக்ரம், பணிப்பெண் ஆகிய மூவருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானதும் அனிதா உடனே தனிமைப்படுத்தப்பட்டார்.
பத்து நாட்கள் தனிமைக் காலத்தை முடித்து அக்டோபர் 25ஆம் தேதி அனிதா அறையிலிருந்து வெளியேறியதும் உடனே மகனை அள்ளி அணைக்க மனம் துடித்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டு அறையைக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினர். வீடு முழுக்க சுத்தம் செய்த பின்னரே மகனைத் தூக்கிக் கொஞ்சினார்.
"கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில். பிப்ரவரி மாதம் மகன் விக்ரம் பிறந்தான். வீட்டில் எவருக்கும் கிருமித்தொற்று ஏற்படாமல் கண்ணும் கருத்துமாக இத்தனை காலம் மிகப் பாதுகாப்பாக இருந்தோம்.
"அண்மைய வாரங்களில் கிருமிப்பரவல் பெரிதும் கூடியுள்ளது. இருந்தாலும் தொற்றுக்கு நாம் ஆளாகும் வரை நோயின் கடுமையையும் பிரச்சினைகளையும் உணர் வதில்லை," என்றார் அனிதா.
தனிமைக்காலத்தின்போது தீபாவளிக்காக பொருட்கள் வாங்க இயலாத நிலையில் இணையம் வழியாக மளிகைப்பொருட்கள், ஆடைகள், பலகாரங்கள் ஆகியவற்றை வாங்கினர் இந்தத் தம்பதியர்.
உயிர் மருத்துவப் பொறியியலில் முனைவர் பட்டக்கல்வி பயின்றுவந்த திருவாட்டி அனிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை, மெய்நிகர் பட்ட மளிப்பு விழாவில் குடும்பத்தின ருடன் கலந்துகொண்டார்.
"இது எனக்கு வெற்றிகளைத் தந்த காலகட்டம். ஒரு குடும்பமாக நாங்கள் கிருமிப்பரவலை முறியடித்த வெற்றியுடன் இந்த வெற்றியையும் சேர்த்து தீபாவளியைக் கொண்டாடுகிறோம்," என்று மனநிறைவுடன் கூறினார் அனிதா.