சிறு வயது முதல் விமானங்கள் என்றால் நந்து தினேஷ் குமாருக்கு கொள்ளை ஆசை. விமானத்தில் பறப்பது மட்டும் அல்ல, விமானியாக வேண்டும் என்ற இலட்சியமும் அவருள் எழுந்தது.
அந்தக் கனவை நனவாக்க உயர்நிலைப் பள்ளியிலேயே அவர் அடித்தளம் இட்டார். உயர்நிலைப் பள்ளியில் ‘ஏரோமாடலிங்‘ இணைப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதற்கு பின், சிங்கப்பூர் இளையர் விமானிகள் சங்கத்தில் (Singapore Youth Flying Club) இணைந்தபோது தமது இலக்கை நெருங்குவதாக அவர் உணர்ந்தார். அண்மையில் சிங்கப்பூர் இளையர் விமானிகள் சங்கத்தின் ‘சிறந்த விமானி’ மற்றும் ‘எஸ்டி இன்ஜினியரிங் எக்சலன்ஸ்’ விருதுகளைப் பெற்ற திரு நந்து, இளம் விமானிகள் பயிற்சியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவரான 18 வயது திரு நந்து, சிங்கப்பூர் இளையர் விமானிகள் சங்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களைக் கற்றுக்கொண்டதாக தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
“சிங்கப்பூர் இளையர் விமானி கள் சங்கத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் என்னை நல்லதொரு விமானியாக உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, என்னை ஒரு நல்ல மனிதனாகவும் மாற்றியுள்ளது,” என்று அவர் கூறினார்.
தமது பெற்றோர், நண்பர்கள் ஆகியோர் தந்த ஊக்கம், இலக்கை நோக்கி வெற்றி நடை போட முக்கிய உந்துதலாக இருந்தது என்றும் திரு நந்து குறிப்பிட்டார். இப்பயிற்சியில் மனஉளைச்சலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
கல்வி பயில்வது மட்டுமின்றி, விமானிப் பயிற்சியிலும் ஈடுபட்டேன். அத்துடன், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இவை அனைத்தையும் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவே நான் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால்,” என்றார் திரு நந்து.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 நெருக்கடி நிலையால் வேறு பல சவால்
களையும் அவர் சந்தித்தார். வானில் விமானத்தைச் செலுத்தும் பயிற்சியில் ஈடுபட முடியாதநிலை ஏற்பட்டுள்ள போதிலும் நவீன மாதிரி கருவிகளின் உதவியுடன் நிலத்தில் இருந்தவாறே பயிற்சி செய்து வருவதாக அவர் கூறினார். சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் சேருவதே திரு நந்துவின் அடுத்த இலக்கு.