செந்தோசா தீவில் உயரமான இடத்திலிருந்து அனைத்துத் திசைகளையும் பார்க்கக்கூடிய சவாரியை அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம். இந்தப் புதிய அம்சத்துக்கு 'ஸ்கைஹீலிக்ஸ் செந்தோசா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே இது திறக்கப்படுகிறது. அதிலும் பள்ளி விடு
முறையில் சவாரி திறக்கப்படுவதால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அதை நடத்தும் மவுண்ட் ஃபேபர் லெஷர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சவாரிக்கான நுழைவுச்சீட்டுகளை மவுண்ட் ஃபேபர் லெஷர் நிறுவனத்தின் இணையப்பக்கத்திலிருந்து வாங்கலாம்.
பெரியவர்களுக்கான நுழைவுச்சீட்டின் விலை $18. நான்கு வயதிலிருந்து 12 வயது வரையிலான சிறுவர்களின் நுழைவுச்சீட்டின் விலை $15.
கொவிட்-19 கிருமியுடன் வாழும் மீள்திறன்மிக்க நாடு என்று திகழ சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. அதன்படி சிங்கப்பூரின் இந்த ஆக உயரமான திறந்தவெளி சவாரி திறக்கப்
படுகிறது.
அதுமட்டுமல்லாது அனைத்துலகப் பயணங்களை சிங்கப்பூர் படிப்படியாக மீண்டும் தொடங்குவதை இப்புதிய சவாரி சாதகமாகப் பயன்படுத்துகிறது.
இத்தகைய புதிய அம்சங்கள் சிங்கப்பூருக்கு மேலும் பல வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க உதவும் என்று சிங்கப்பூர் பயணத்
துறைக் கழகத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள், சுற்றுப்பயண மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜீன் இங் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி சிங்கப்பூரர்களும் தங்கள் குடும்பத்தினருடன் இந்தச் சவாரியை மகிழ்ச்சியுடன் அனு
பவிக்கலாம் என்றார் அவர்.
இந்த 12 நிமிடச் சவாரி மூலம் 35 மீட்டர் உயரத்துக்குச் செல்லலாம். மேலே சென்றதும் பத்து நிமிடங்களுக்கு அந்த கொண்டோலா கூடம் சுற்றும்.
இதன்மூலம் உயரத்திலிருந்து அனைத்துத் திசைகளில் உள்ள எழில்மிகு காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, சவாரியில் ஏறுபவர்களின் உயரம் குறைந்தது 1.05 மீட்டராக இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் 16 பேர் சவாரி செய்யலாம் என்றபோதிலும் சமூக இடைவெளி விதிமுறையைக் கருத்தில் கொண்டு எட்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.