சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக வடிகால்களும் கால்வாய்களும் கிட்டத்தட்ட நிரம்பும் நிலைக்குச் சென்றதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. பாசிர் பாஞ்சாங் மற்றும் காமல்வெல்த் டிரைவ் பகுதிகளில் உள்ள வடிகால்களும் கால்வாய்களும் காலை 8.20 மணியளவில் 90 விழுக்காடு நிரம்பியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன.
அதேநேரம், ஜாலான் பூன் லே மற்றும் கிளமெண்டி ரோடு ஆகியவற்றின் கால்வாய்களிலும் காலை 8.30 மணியளவில் 90 விழுக்காட்டுக்கும் மேல் நீர் நிரம்பி ஓடியது.
அதேபோல தேசிய தொடக்கக் கல்லூரி அருகில் உள்ள ஹில்கிரெஸ்ட் ரோடு, சைம் டார்பி சென்டர் அருகில் உள்ள டன்னர்ன் ரோடு ஆகிய பகுதிகளின் கால்வாய்களும் 90 விழுக்காட்டுக்கும் மேல் நிரம்பின.
முன்னதாக, காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை சிங்கப்பூரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் காரணமாக பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்றும் கழகம் தெரிவித்து இருந்தது.
அதேபோல சிங்கப்பூர் வானிலை ஆய்வகமும் இந்த மாதத்தின் எஞ்சிய நாள்களில் ஈரமான வானிலையே காணப்படும் என முன்னுரைத்து இருந்தது.
பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில நாள்கள் மாலை வரை மழை நீடிக்கக்கூடும் என்றும் அது கூறியிருந்தது.
இருப்பினும் இந்த மாதத்தின் முதல் பாதியில் காணப்பட்ட அளவுக்கு ஈரமான வானிலை இரண்டாம் பாதியில் இருக்காது என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதத்திற்கான ஒட்டுமொத்த மழை அளவு சராசரிக்கும் அதிகமாகவே இருக்கும்.
பெரும்பாலான நாள்களில் அன்றாடம் பதிவாகும் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். மேகக்கூட்டம் குறைந்த நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும்.