பொதுப் போக்குவரத்துப் பயணங்களை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்புடையதாக்கும் நோக்கில் முதல்முறையாகப் பரிவுமிக்க பயணிகள் வாரம் நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப்பால் தொடங்கிவைக்கப்பட்டது. பரிவுமிக்க பயணக் கலாசாரத்தை மேம்படுத்துவதே இந்த இயக்கத்தின் இலக்கு.
பரிவுமிக்க பயணிகள் வாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ள கேரிங் எஸ்ஜி பயணிகள் வழிநடத்தல் குழு (சிசிஎஸ்சி) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 2,000க்கும் மேற்பட்ட பயணிகள் பங்கெடுத்தனர்.
இணையம் மூலம், கலந்துரையாடல்களின்போது நேருக்குநேர் கருத்து கூறுதல் போன்று போன்று பல்வேறு தளங்கள் வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது.
பொதுப் போக்குவரத்தில்
பயணம் செய்யும்போது உதவி தேவைப்படும் பயணியைப் பார்த்தாலும் உதவி செய்யத் தயக்கம் காட்டக்கூடும் என்று ஆய்வில் பங்கெடுத்த இளையர்கள் சிலர் தெரிவித்தனர்.
வெளிப்படையாகக் காட்டாமல் உதவி செய்யும் பழக்கம் இருப்பதாகவும் சில இளையர்கள் குறிப்பிட்டனர்.
அதாவது, உடற்குறையுள்ளோர் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் போன்ற உதவி தேவைப்படும்
பயணிகளைப் பார்த்தால் தங்கள் இருக்கைகளிலிருந்து அமைதியாக எழுந்து அவர்களுக்கு இடம் கொடுப்பதை அவர்கள் சுட்டினர். பேருந்தை நோக்கி பயணி ஓடி வருவதைப் பார்த்தால் பேருந்து அங்கிருந்து கிளம்பிவிடாமல் இருக்க பேருந்தை நிறுத்துவதற்கான பொத்தானை அழுத்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கண் பார்வையற்ற பயணிகள் சிலர் மற்றவர்களின் உதவி இல்லாது பயணம் செய்ய விரும்புவதாக ஆய்வில் தெரியவந்தது. இருப்பினும், தங்கள் பாதுகாப்புக் கருதி உதவி நல்கும் சகப் பயணிகளுக்கும் நடந்து சென்று இருக்கையில் அமர போதிய இடத்தையும் நேரத்தையும் தருவோருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தங்களுக்கு உதவி வழங்க மற்ற பயணிகள் முன்வரும்போது அதை ஏற்க மறுத்துள்ளதாகவும் கண் பார்வையற்ற பயணிகள் கூறினர். இதை உதவி செய்ய முன்வந்தவர்கள் தவறாகப் புரிந்துக்கொள்ளக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பொதுப் போக்குவரத்துப் பயணங்களை அனைவருக்கும் ஏற்
புடையதாக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய விதமாக அது இருக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பரிவுமிக்க பயணிகள் வாரத்தின் ஒரு பகுதியாக, நேற்று முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பல நடவடிக்கைகள் நடத்தப்படும்.
"ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்குச் செல்வது மட்டும் பயணமாகிவிடாது. சமூகமாக இருந்து எவ்வாறு பொது இடங்
களைப் பகிர்ந்துகொள்கிறோம் என்பது முக்கியம்.
"ஏற்பாட்டுக் குழு, பொதுப் போக்குவரத்துப் பங்குதாரர்களின் முயற்சிகள் முக்கியம் என்றபோதிலும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே புதிய பயணக் கலாசாரம் ஒன்றை உருவாக்க முடியும். அந்தக் கலாசாரம் மூலம் சக பயணிகளுக்குப் பரிவு காட்டுவது வாழ்வின் ஒரு பகுதியாகிவிடும்," என்று பரிவுமிக்க பயணிகள் வார இயக்கத்தின் அறிமுக விழாவில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.