யூதர்கள் உட்பட அனைத்துச் சமூகத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கு வதில் சிங்கப்பூர் முன்னுரிமை வழங்குவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள ஜேக்கப் பல்லாஸ் நிலையத்தில் சிங்கப்பூர் யூதர்கள் அரும்பொருளகத்தின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
அரும்பொருளகத்தைச் சுற்றிப் பார்த்த அமைச்சர் சண்முகம், யூதர்களின் ஹன்னுக்கா மெனோரா ஒளியூட்டுச் சடங்கிலும் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் யூதர்கள் அரும்
பொருளகம் நிரந்தர காட்சிக்கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் யூதர்களின் வரலாற்றை அது காட்டுகிறது. சிங்கப்பூரில் சிறுபான்மை இனமாக யூதர்கள் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்று யூதர் நல்வாழ்வு வாரியம் வெளியிட்ட இதழ் குறிப்பட்டது.
"நீங்கள் சிங்கப்பூரின் ஒரு பகுதி மட்டுமல்ல. நீங்கள் சிங்கப்பூரில் செழிப்புடன் வாழ்கிறீர்கள். நீங்கள் சிங்கப்பூரில் செழித்தோங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நீங்கள் சிங்கப்பூரராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாவும் சரி. சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால் நீங்கள் நலமாக, சிறப்பாக வாழ வேண்டும். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய எங்களால் ஆன அனைத்தையும் நாங்கள் செய்வோம்.
"பல நாடுகளில் குறைந்து வரும் பல்வகை சுதந்திரங்களை நீங்கள் சிங்கப்பூரில் அனுபவிக்க நாங்கள் தேவையான அனைத்தும் செய்வோம்," என்று சிங்கப்பூரில் உள்ள யூதர் சமூகத்திடம் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
"சிங்கப்பூரில் நாங்கள் உருவாக்கும் சமுதாயத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள், சிறுபான்மை இனத்தவர்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. நல்லவர்கள், தீயவர்கள் என்ற வித்தியாசம் மட்டுமே பார்க்கப்படும். சிங்கப்பூரில் நல்லவர்கள் எந்த இனம், மொழி, சமயம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்
களாக இருந்தாலும் தீயவர்களைவிட நலமாக இருப்பர்," என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.