இர்ஷாத் முஹம்மது
தொற்றுநோய்ப் பரவல் சூழலில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் முடங்கி இருந்த உறவினர் அனுபவித்த சிரமங்கள் 52 வயது திருமதி தமிழ்ச்செல்வி இராஜராஜனை மிகவும் வேதனைப்படுத்தியது. அந்த வேதனை சிறுகதை கருவானது. தமிழ்ச்செல்வியின் வேதனைக்கு ஒரு வடிகாலான 'சன்னல்' சிறுகதை இவ்வாண்டின் 'தங்கமுனை' விருதுப் போட்டியின் தமிழ்ச் சிறுகதைப் பிரிவில் முதல் பரிசை வென்றது.
சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், போட்டிகள் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் இல்லத்தரசியான திருமதி தமிழ்ச்செல்வி பல சிறு
கதைகள் எழுதியுள்ளார்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய இலக்கியப் போட்டியான 'தங்கமுனை' போட்டியிலும் பலமுறை பங்கேற்றுள்ளார். முதன்முறையாக பரிசு பெற்றதில், அதுவும் முதல் பரிசு பெற்றதில் திருமதி தமிழ்ச்செல்விக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
"என் இரட்டைப் பிள்ளைகளான மகனுக்கும் மகளுக்கும் 25 வயது ஆகிறது. கடந்த சில ஆண்டு
களாகப் பல அமைப்புகளின் இலக்கியக் கூடல்களில் பங்கேற்று என் எழுத்துத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது," என்றார் அவர்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தங்கமீன் இலக்கிய வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் வழங்கிய தளங்கள் வாசிப்பை விரிவாக்கவும் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கும் உறுதுணையாக இருப்பதாக திருமதி தமிழ்ச்செல்வி குறிப்பிட்டார்.
அதே கருத்தை பல விருதாளர்களும் வழிமொழிந்தனர்.
சிங்கப்பூரில் படைப்பிலக்கியத்தை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்தில் வளரும் எழுத்தாளர்களுக்காக சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளில் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை 'தங்கமுனை' விருதுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 15வது முறையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒன்பது வயது முதல் 89 வயது வரையிலானோர் பங்கெடுத்தனர். மொத்தம் 2,000 படைப்புகள் போட்டிக்கு கிடைக்கப்பெற்றன.
இளையர்களின் பங்கெடுப்பு அதிகரித்துள்ளதாகவும் போட்டியில் பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், 30 வயதும் அதற்கும் குறைந்த கீழ் வயதுடையவர்கள் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மொத்தம் 38 பேர் பரிசு பெற்றனர்.
தமிழ்க் கவிதைப் பிரிவில் முதல் பரிசை 41 வயது திருமதி பானு சுரேஷ் வென்றுள்ளார்.
"நோய்மையின் மகிழ்ச்சி மற்றும் மீள்தலின் துயரம்" எனும் தலைப்பிலான கவிதைக்கும் இதர கவிதை களுக்கும் அவருக்குப் பரிசு கிடைத்துள்ளது.
மேடை நாடகம், கவிதை, கதை, கட்டுரை, சிறுகதை எனப் பல
துறைகளிலும் ஈடுபட்டு வரும் திருமதி பானு, தமது கலைப் பயணத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாக இந்த விருதைக் கருதுகிறார்.
"பாரதியார் பிறந்தநாள் அன்று விருது வழங்கப்படுவது கூடுதல் மகிழ்ச்சி," என்ற திருமதி பானு, மேடை நாடகக் கலைஞரான தந்தை தான் தமக்கு முன்னோடி என்றார்.
"பெற்றோரும் கணவரும் அளித்துவரும் ஊக்கமும் உற்சாகமுமே கலை, இலக்கியத் துறைகளில் தொடர்ந்து ஈடுபட உந்துசக்தியாக உள்ளது," என்றார் இரு பிள்ளை
களுக்குத் தாயான கலை, பண்பாடு சார்ந்த பயிற்றுவிப்பாளராகப் பணிபுரியும் திருமதி பானு.
தமிழ் முரசு, தேசிய கலைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'விசை' பயிலரங்கில் பங்கெடுத்துள்ள பானு, இந்த ஆண்டு தேசிய கவிதை விழா நடத்திய போட்டியில் சமூகம் எனும் அங்கத்தில் முதல் பரிசு வென்றார்.
ஆங்கிலச் சிறுகதைப் பிரிவில் 35 வயது திவ்யா கோவிந்த
ராஜனின் 'ஹேண்ட்ரைட்டிங்' (Handwriting) எனும் சிறுகதை முதல் பரிசைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பயில இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 2003ல் வந்த திருமதி திவ்யா, கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் வீட்டில் இருந்த காலகட்டத்தில் பொழுதுபோக்காக எழுதத் தொடங்கினார்.
"தனிப்பட்ட அனுபவங்களை வைத்து எழுதுவோமே என்று ஆரம்பித்தேன். போட்டியை மனதில் வைத்துக்கொண்டு எழுதவில்லை. பின்னர் போட்டி பற்றி அறிய வந்தபோது அனுப்பிவைத்தேன். ஆனால், பரிசு பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை," என்று ஆச்சரியத்தைப் பகிர்ந்தார் திருமதி திவ்யா.
இந்த விருது மூலம் ஆர்வமும் உற்சாகமும் மேலும் கிடைத்துள்ளது என்று கூறினார் விநியோகத் துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் மூத்த இயக்குநராகப் பணியாற்றும் திவ்யா. தமிழில் எழுதவும் இவர் விருப்பம் கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அனைத்துப் பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசுக்கு $7,000 ரொக்கமும் சான்றிதழும் கேடயமும் அளிக்கப்பட்டது. இரண்டாம் பரிசுக்கு $5,000 ரொக்கமும், சான்றிதழும்; மூன்றாம் பரிசுக்கு $3,000 ரொக்கமும் சான்றிதழும்; 'கௌரவ குறிப்பிடல்' எனும் ஆறுதல் பரிசுக்கு $500 ரொக்கமும் வழங்கப்பட்டன.
தமிழாசிரியரான 36 வயது திரு கூத்தபெருமாள் சரவணபெருமாள், கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார்.
'திசைக்கழுத்து' மற்றும் இதர கவிதைகளுக்காக கிடைத்த அந்தப் பரிசு பற்றி கூறுகையில், "என் கவிதைக்கு மட்டுமல்ல, இது மொழிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்," என்றார் அவர்.
"பரந்த வாசிப்பு தேவை. நிறைய வாசித்தால்தான் நல்ல கவிதைகளை எழுத முடியும். இயல்பாக கவிதையில் ஆர்வம் அதிகம் உள்ளதால் கவிதைப் போட்டியில் பங்கெடுத்தேன்," என்றார் அவர்.
"கவிமாலை போன்ற அமைப்புகள் நல்ல தளத்தை வழங்கின. பல போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். எனினும், இந்த தேசிய போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் அவர்.
சிறுகதைப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற ஹேமலதா வரலாற்றுக் கதையை எழுதியதாகத் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டிலும் 'தங்கமுனை' போட்டியின் தமிழ்ச் சிறுகதைப் பிரிவில் இரண்டாம் பரிசை அவர் வென்றுள்ளார்.
அதே ஆண்டு அவரது 'வாழை மர நோட்டு' எனும் நூல் சிங்கப்பூர், தமிழ் கட்டுரை நூல் பிரிவில் புத்தக மன்றத்தின் இலக்கியப் பரிசை வென்றது. இவ்வாண்டு 'தங்கமுனை' போட்டியின் தமிழ்க் கவிதைப் பிரிவில் இவருக்கு 'கௌரவ குறிப்பிடல்' பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கவிதைகள் தரம் வாய்ந்தவையாக இருந்தன என்றும் படைப்பாளர்கள் முயற்சி எடுத்து எழுதியிருப்பது தெரிந்தது என்றும் கூறினார் தமிழ்க் கவிதைப் பிரிவுக்கு நடுவராக இருந்த மூவரில் ஒருவரான கவிஞர் நெப்போலியன். திரு சித்துராஜ் பொன்ராஜ், திருவாட்டி கீதா சுகுமாறன் ஆகியோர் இதர இருவர். தமிழ்ச் சிறுகதைப் பிரிவுக்கு முனைவர் ஆ.ர.சிவ
குமார், திருமதி சித்ரா ரமேஷ், திரு சு.வேணுகோபால் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.