சிங்கப்பூரில் கடந்த 28 ஆண்டு களாகச் செயல்பட்ட ஜாமியா சிறுவர் இல்லம், இம்மாதம் 14ஆம் தேதி மூடப்பட்டது.
பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், வசதி குறைந்த குடும்பங்களின் குழந்தைகள் மற்றும் துன்புறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு அந்த இல்லம் புகலிடமாக இருந்து வந்தது.
"தற்போது சமூகத்தின் தேவை மாறியிருக்கிறது. தேசிய அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப கொள்கைகளையும் நடைமுறைகளையும் புகுத்த வேண்டியது அவசியம்," என்று நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
இதுவரை சிறுவர் இல்லத்தைப் பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வளங்களையெல்லாம் மேம்படுத்து வதால் குடும்பத்தோடு உள்ள குழந்தைகளுக்கும் கைவிடப்பட்ட மற்றும் ஒற்றைப் பெற்றோர் குழந்தை களுக்கும் உதவ முடியும் என்று அது கூறியது.
"ஜாமியா இல்லம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு ஈடாக பல்வேறு வலுவான சமூக உதவித் திட்டங்களை எதிர்பார்க்கலாம். கல்வி ஆதரவு வழங்கப்படும். இது, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் குடும்பங்களுக்கும் பலனளிக்கும்," என்று அறிக்கை சொன்னது.
குலிமார்ட் கிரசெண்டில் செயல்பட்டு வந்த ஜாமியா சிறுவர் இல்லத்தை சமூக சேவை அமைப்பான ஜாமியா சிங்கப்பூர் நடத்தி வந்தது.
மழலையர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள், தாதிமை இல்லங்கள் ஆகியவற்றையும் ஜாமியா சிங்கப்பூர் தொடர்ந்து நடத்தி வருகிறது.
கடந்த 1993ஆம் ஆண்டில் ஜாமியா சிறுவர் இல்லம் தொடங்கப் பட்டது. அது, ஆறு முதல் 18 வயது வரையிலான நூறு குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தது.
ஜாமியா சிறுவர் இல்லம் மூடப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க ஜாமியா சிங்கப்பூர் மறுத்துவிட்டது.
இதற்கிடையே இல்லத்தில் வசித்துவந்த குழந்தைகளுக்கான பராமரிப்பை உறுதி செய்ய அதனுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
"சமூகத்தின் இதர தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக ஜாமியா சிறுவர் இல்லத்தை மூட ஜாமியா சிங்கப்பூர் முடிவு செய்தது.
"குடும்பங்களில் வளர்ப்புப் பிள்ளைகளாக குழந்தைகள் வளர்ந்து வருவதால் இல்லத்திற்கு வெளியே அவர்களுக்கு பராமரிப்பு தேவைப் படுகிறது.
"பராமரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு ஏற்ப ஜாமியா சிங்கப்பூரின் நோக்கமும் மாறியிருக்கிறது. இதற்கு அமைச்சு ஆதரவாக இருக்கும்," என்று அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.