கி. ஜனார்த்தனன்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனக்கு ஏற்பட்ட நெருக்கடி தருணங்களைப் பாடங்களாக கொண்ட 16 வயது சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி மாணவி ஃபாத்திமா சாயிமா (படம்), பின்னாளில் பிறருக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னம்பிக்கை நிறைந்த மாணவத் தலைவராக மாறினார்.
குடும்பத்தில் நிதி நெருக்கடி, கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்பு எனப் பிரச்சினைகள் தனது வாழ்க்கையில் ஏற்பட்டபோதும் நேற்று கிடைத்த தமது வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார் ஃபாத்திமா.
ரசாயனம், நிலவியல், சமூகக் கல்வி ஆகிய பாடங்களில் இயல்பாகவே சிறந்த தேர்ச்சி பெற்று வந்த ஃபாத்திமா, ஆங்கிலம், கணிதப் பாடங்களில் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருந்தது.
இக்குறிப்பிட்ட பாடங்களில் சலிப்புத் தட்டாமல் இருக்க, நண்பர்களுடன் சேர்ந்து படித்ததாகவும் கவனம் செலுத்த இசையைக் கேட்டுக்கொண்டே படித்ததாகவும் ஃபாத்திமா கூறினார்.
"படிக்கும் நேரத்தில் குழப்பமும் சந்தேகமும் ஏற்படும்போது பதறாமல் இருப்பது முக்கியம்," என்று அவர் கூறினார். ஃபாத்திமா 2016ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியில் இருந்தபோது விமானத்துறையில் பணிபுரிந்த அவரின் தந்தை வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஃபாத்திமாவின் தாயார் இல்லத்தரசி என்பதால் பெற்றோர் இருவரும் அந்நேரத்தில் முழுநேர வேலை ஏதும் இல்லாமல் போனது குடும்பத்தின் நிதி நிலைமையை மோசமாக்கியது. ஆயினும், அதே பெற்றோரின் அன்பும், புரிந்துணர்வும் அவர்களின் வீட்டைப் பதற்றமில்லாத சூழலாக வைத்திருந்தது.
"அதிகமான பொருள்களை வாங்கவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளாமல் கட்டுப்பாடுடன் வாழப் பழகிக்கொண்டேன். நெருக்கடி காலத்தில் அமைதி காக்கும் பண்பைப் பெற்றோர் வழி கற்றுக்கொண்டேன்," என்றார் இரண்டு மூத்த சகோதரர்களைக் கொண்ட ஃபாத்திமா.
உயர்நிலை ஒன்றில் படித்தபோது வகுப்பு நண்பர்களின் முன்னால் நின்று பேச இயலாமல் பல நேரங்களில் தயங்கிய ஃபாத்திமா, படிப்படியாக தமது பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொண்டார்.
"வகுப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதனைப் பயன்படுத்திக்கொண்டு பேச முன்வந்தேன். காலப்போக்கில் எனது அச்சமும் படிப்படியாகக் குறைந்தது," என்று கூறினார்.
ஃபாத்திமாவின் பொறுப்புணர்வு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றைக் கண்டு சாரணியர் அமைப்பில் 'மூத்த கண்காணிப்புத் தலைவர்' பொறுப்பை அவருக்குத் தந்ததாக அவரின் ஆசிரியர் சித்தி ஸுபைடா பிந்தி இஸ்மைல், 44, தெரிவித்தார். தமிழ்மொழிப் பாடத்தில் சாதாரண நிலைத் தேர்வை இவ்வாண்டு நவம்பர் 10ஆம் தேதியன்று எழுதிய ஃபாத்திமாவுக்கு, அதற்குச் சில வாரங்கள் முன்புதான் கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி ஆனது.
"அக்டோபர் 18ஆம் தேதி என் தந்தைக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மறுநாள் எனக்கும் கொவிட்-19 தொற்றியுள்ளதை ஏஆர்டி பரிசோதனை மூலம் உறுதி ஆனது," என்று கூறினார்.
கிருமி தொற்றியது தனக்குள் அச்சத்தை ஏற்படுத்தியபோதும் அமைதியாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையே தமது எண்ணமாக்கிக்கொண்டதாக அவர் கூறினார். பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலத் திட்டமிடும் ஃபாத்திமா, வருங்காலத்தில் ரசாயனப் பொறியாளராக பணியாற்ற ஆசைப்படுகிறார்.
"சரியாகத் திட்டமிட்டுப் படித்தால் பதற்றம் குறையும். தேவைப்படும்போது உதவி கேட்கக் தயங்கக்கூடாது. நிதானம் நிச்சயம் வெற்றியைத் தரும்," என்பதே மாணவர்களுக்கு இவர் கூறும் அறிவுரையாகும்.