புத்தாக்கத்தை அரவணைத்து, சவால்களை எதிர்கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் முக்கிய அங்கம் வகித்த மனநிறைவில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கிறார் 36 வயது திரு ஜோசப் ஜெரெமையா விஜயசேகர்.
இசையமைப்பதில் அதீத ஆர்வம் உள்ள இவர், சிங்கப்பூரில் கத்தோலிக்கத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
முழுநேர விற்பனையாளராக பணியாற்றும் இவர், ஆர்ச்சர்ட்டில் உள்ள உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் தேவாலயத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொண்டூழியராகச் சேவை ஆற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை, 'சிங்கப்பூர் உயர் மறைமாவட்ட தமிழ் ஆணையம்' ஒவ்வொரு வார இறுதியிலும், யூடியூப் தளத்தில் நேரடிக் காணொளிகளை வெளியிட்டு வருகிறது.
அதற்காக மற்ற சிங்கப்பூர் மற்றும் உலகளாவிய கலைஞர்களுடன் இணைந்து ஜெரெமையா பல பாடல்களை இயற்றி உள்ளார்.
"இந்த கொவிட்-19 பரவலால் நிகழ்ச்சிகளுக்குத் தயாராக மிகவும் சவாலாகத்தான் இருந்தது. ஆனால், தொழில்நுட்பத்தின் உதவியுடன், சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் இணைந்து சிறப்பான பாடல்களை இயற்றியுள்ளோம்.
"நான் நான்கு பாடல்களை இயற்றியுள்ளேன். பாடல்களுக்கு வரிகள் எழுதியவர் திரு ஜான் கென்னடி. மூன்று மாதங்களுக்கு இணையத்தின் வழி வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் வேலை செய்தேன். இந்த நிகழ்ச்சியில், 30 பாடகர்கள் மற்றும் 15 இளையர்கள் பங்கேற்றுள்ளனர்.
"போப் ஜான் பால் 2ன் வரிகளை வைத்து, கொண்டாட்டங்களின் தலைப்பு, நம்பிக்கை என்ற கருப்பொருள் ஆகியவற்றை ஒட்டி பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளேன். இது இந்த கொவிட்-19 சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்," என்று கூறினார்.
முன்பதிவு செய்த கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனையை கிறிஸ்மஸ் அன்று, 'சிங்கப்பூர் உயர் மறைமாவட்ட தமிழ் ஆணைய' யூடியூப் பக்கத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஒளிபரப்பினர்.
ஜெரெமையா அதற்குப் பழைய பாடலின் சங்கீத வரிகளை மாற்றி அமைத்துள்ளார்.
"கிறிஸ்மஸ் அன்று கொவிட்-19 விதிமுறைகளால் ஒன்றுசேர்ந்து கொண்டாடும் நிகழ்ச்சிகள் சற்று குறைவு. ஆனால் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து பாடல்களுக்கு எனது பங்கை ஆற்றியது எனக்கு திருப்தியை அளிக்கிறது. மேலும், நான் எனக்குப் பிடித்தமான ஒன்றைச் செய்கிறேன்.
"சில ஆண்டுகளுக்கு முன், பிரபல இசையமைப்பாளர் அனிருத் நேரடி இசை நிகழ்ச்சியில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதேபோல்தான் இளையர்கள் அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து தங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடவேண்டும். அதற்கு என்றும் தயங்கக்கூடாது," என்று கூறினார் திரு ஜெரெமையா.
செய்தி: சக்தி மேகனா