சக்தி மேகனா
தனது பள்ளிப் பருவத்திலிருந்தே சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் ஒரு வழியில் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்ற குறிக்கோளை ஏஞ்சல் ஜோசப் செனா கொண்டிருந்தார். அந்த லட்சியம் நிறைவேறுவதற்குச் சரியான வாய்ப்பை அமைத்துத் தந்தது சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம்.
அண்மையில் ரசாயனப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார் 27 வயது ஏஞ்சல். தமது பல்வேறு முயற்சிகளுக்குப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிறு வயதில், தனது தந்தையைப் போல் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் சுற்றுச்சூழலின் மீது இருந்த அக்கறையாலும் ஆர்வத்தாலும் அவர் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் ரசாயனப் பொறியியல் படிப்பை மேற்கொள்ள முடிவெடுத்தார்.
படிப்பில் மட்டுமின்றி இணைப்பாட நடவடிக்கைகளிலும் அவர் சிறந்து விளங்கி னார். தன்னால் பல்கலைக்கழகத்திற்குப் பங்களிக்க முடியும் என்பதை அவர் பெரிதும் நம்பி பாடுபட்டார்.
பல்கலைக்கழகத்தைப் பல்வேறு நிகழ்வுகளில் பிரதிநிதிக்கும் தூதராகவும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் மாணவத் தலைவராகவும் ஏஞ்சல் பொறுப்பேற்றிருந்தார். இதற்காக அவருக்கு 'மாணவர் தலைவர்' விருது வழங்கப்பட்டது. வேதியியல் பொறியியல் மாணவர் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் முன்னிலையில் பல்கலைக்கழகத் தூதர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலை வழிநடத்தினார்.
"வேலையிடத்தில் சிறப்பாகப் பணியாற்ற எத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கலந்துரையாடல் வழி மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். இதுவே எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஒரு வெற்றியாகும்," என்று கூறினார் '்சூ சியாவ் பெங்' வெளிநாட்டு உபகாரச் சம்பளம் பெற்றுள்ள ஏஞ்சல்.
வேலைப் பயிற்சிக்காக 'ஏர் லிக்விட் சிங்கப்பூர்' நிறுவனத்தில் இருந்தபோது அங்குள்ள ஹைட்ரஜன் ஆலையின் குறிப்பிட்ட ஓர் அம்சத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவினார்.
ஆண்டுதோறும் சிங்கப்பூர் ரசாயனத் தொழில்துறை மன்றம் ஏற்பாடு செய்து வரும் 'கெம்எக்ஸ்' நிகழ்வை ஏஞ்சல் ஏற்று நடத்தியபோது, அதிகமான நிறுவனங்கள் அதில் கலந்துகொண்டன.
"பல்கலைக்கழகத்திற்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் பங்களிக்கவேண்டும் என்பதே எனது லட்சியம். என் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் எனக்குத் துணையாக இருக்கின்றனர்," என்று ஏஞ்சல் கூறினார். தற்போது 'எச்பி சிங்கப்பூர்' நிறுவனத்தில் செயல்முறைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.
"இவ்விடத்தில் ஆண் பொறியாளர்களுக்குச் சம எண்ணிக்கையில் பெண் பொறியாளர்கள் உள்ளனர். அதையே ஒரு பெரிய முன்னேற்றமாக நான் கருதுகிறேன். இங்கு நான் குறைந்தது எட்டு ஆண்டுகளாவது வேலை செய்ய விரும்புகிறேன். அப்போதுதான் எனது துறையைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடியும். கற்றதைக் கொண்டு என்னால் முடிந்த அளவுக்கு நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்காற்ற முடியும் என்று நம்புகிறேன்," என்று உறுதியாகக் கூறினார் ஏஞ்சல்.