தக்ஷின்னா பாலு 14 வயதாக இருந்தபோது தனது தாயாரை இழந்தார். அப்போது அவர் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.
அந்த இருண்ட நாள்களில் அவருக்குப் பெரும் ஆறுதலாக அவரின் ஆசிரியர் திருமதி டான் ஹுய் நா இருந்தார்.
பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இருந்தவாறு படித்து வந்த தக்ஷின்னா, தன் தாயார் பிரிந்த துயரத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்த திருமதி டான், அடிக்கடி தக்ஷின்னாவுக்கு ஆலோசனை வழங்கி அவரது இழப்பிலிருந்து மீண்டு வர உதவினார்.
திடல் தடத்தில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தினமும் இரண்டு மணி நேரக் கடும் பயிற்சிகள் இடம்பெறும், காயங்களும் ஏற்படும். அவற்றில் தயங்காமல் தக்ஷின்னா ஈடுபட்டு வந்தார். பள்ளி மாணவர்களைக் கொண்ட தலைமைத்துவக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்த தக்ஷின்னாவுக்கு நடனத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.
ஏழு முதல் 12 வயது வரை அவர் பரதநாட்டியமும் கற்றிருந்தார். மேலும், தனது பள்ளியில் கிட்டத்தட்ட 100 மாணவர்களுக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு இடையேயான 60வது தேசிய திடல்தடப் போட்டிகளில் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
தற்போது 19 வயதுடைய தக்ஷின்னா, கடந்த ஆண்டின் 'இன்டர்நேஷனல் பாக்கலோரெட்' (ஐபி) தேர்வில் உச்சத் தேர்ச்சி பெற்றார். பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதும் நேர அட்டவணையை மிகுந்த கடப்பாடுடன் பின்பற்றியதால் தேர்வில் தன்னால் சிறப்பாகச் செய்ய முடிந்தது என்கிறார் இவர்.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் 2014ஆம் ஆண்டில் 'ஐபி' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியுடன் சிங்கப்பூர் கலைப் பள்ளி (சோட்டா), ஆங்கிலோ-சீன தன்னாட்சிப் பள்ளி, செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையம் போன்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், கடந்த வாரம் தங்களின் 'ஐபி' தேர்வு முடிவுகளைப் பெற்றனர்.
'ஐபி' தேர்வில் 42 புள்ளிகள் பெற்ற தக்ஷின்னா, விளையாட்டுத் துறையில் தொடர்ந்து இருக்கலாம் அல்லது அத்துறை தொடர்பான மேற்படிப்பை மேற்கொள்ளலாம் என்று முதலில் எண்ணி இருந்தார்.
ஆனால் அவரது திட்டம் நாளடைவில் மாறியது.
சமுதாயத்திற்கு உதவும் ஒரு பணியைத் தேர்வு செய்ய அவர் முடிவெடித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் அல்லது உயிர் அறிவியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள அவர் விரும்புகிறார்.
"தற்போது புதிது புதிதாக நோய்கள் கண்டறியப்படுகின்றன. இவற்றுக்கு மருந்து, சிகிச்சை போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் பணியில் நான் இருக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
"நான் சிறு வயதிலிருந்தே எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பேன். உயர்நிலை ஒன்றில் இருந்து சிங்கப்பூர் விளையாட்டு பள்ளியில் நாங்கள் மாணவர் தங்குவிடுதியில் இருந்தவாறுதான் படிக்க வேண்டும்.
"வாரத்தில் ஆறு நாள்களுக்குத் தினமும் இரண்டு மணி நேரமாவது ஓட்டப்பந்தயப் போட்டிகளுக்குத் தயார் செய்வேன். படிப்பிலும் என் கவனம் சிதறாமல் இருந்தது.
"என் அம்மா இறந்தபோது எனக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், எனது பள்ளி ஆசிரியர், திருமதி டான் தந்த ஊக்கத்தால் என்னால் அந்தத் துயரிலிருந்து தைரியமாக மீண்டு வர முடிந்தது. ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது. இலக்கைக் கைவிடக்கூடாது என்பதில் நாம் குறியாக இருந்தால் வெற்றிக்கனி கிட்டுவது நிச்சயம்," என்று கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த ஐபி தேர்வுகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் உலக சாதனை படைத்திருந்தனர்.
இந்த ஆண்டு ஐபி தேர்வில் 45/45 என்ற உச்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அதாவது 238 பேரில் 133 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: சக்தி மேகனா