அமெரிக்காவின் 'சிடிசி' எனப்படும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சிங்கப்பூரை மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகம் ஏற்படக்கூடிய நாடாக வகைப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு சிங்கப்பூரில் கிருமிப் பரவல் சூழல் குறித்து தகவல் ஏதும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
கிருமித்தொற்று ஏற்படும் அபாயத்தைக் கருத்தில்கொண்டு அமெரிக்கா பிற நாடுகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி வருகிறது. முதல் நிலையில் இடம்பெறும் நாடுகளில் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் ஆகக் குறைவு, நான்காம் நிலையில் உள்ளவற்றில் இந்த அபாயம் ஆக அதிகம்.
சிங்கப்பூர் மூன்றாம் நிலை நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையில் உள்ள நாடுகளில் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்பது அமெரிக்கா தந்துள்ள பொருள்.
மூன்றாம் நிலையில் உள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் இந்த நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கிருமித்தொற்று குறித்த தகவல் இல்லாத நாடுகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தவிர்க்கமுடியாத காரணங்களால் இத்தகைய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும்போது மக்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.