தொழிற்பேட்டைய ஒன்றில் ஒரு சமய ஊர்வலத்தில் நிறைய பேர் பங்கெடுத்துக் கொண்டதாக நம்பப்படும் சம்பவத்தை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருவது தெரியும் என்று காவல் துறையினர் கூறினர்.
அந்தக் காணொளிகளிலும் புகைப்படங்களிலும் சிலர் ஆடிப் பாடுவதுடன் மத்தளம் அடிப்பதும் தெரிகிறது.
குறைந்தது ஒருவர் காவடி தூக்கியதாகவும் அவற்றில் தெரிந்தது.
காணொளிகளில் பல்வேறு இனத்தவர் முகக்கவசம் அணியாமல் பாடிக்கொண்டு வளாகத்துக்குள் கார்கள் செல்லும் சுழல்பாதையில் நடந்துசென்றது காணப்பட்டது.
வேறொரு காணொளியில் ஆடவர் ஒருவர் தேர் இழுத்துச் சென்றதாகத் தெரிந்தது.
மற்றொரு காணொளியில், தற்காலிக வழிபாட்டு இடமாகத் தெரியும் இடத்தின் முன்னால் ஒருவர் காவடி தூக்கி ஆடுவது போல தெரிந்தது.
அந்தச் சம்பவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து காவல் துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அன்று அறிக்கை விடுத்தது.
ஜூரோங் அருகே உள்ள 'தோ குவான் ரோடு ஈஸ்ட்டில்' உள்ள தொழிலியல் கட்டடத்தில் சமய ஊர்வலம் நடந்ததாகக் கூறுப்படுவதைப் பற்றி, உரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக காவல் துறை கூறியது.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அன்று டேங் ரோடில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில், கடும் கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப நடந்த தைப்பூசத் திருவிழாவில் சுமார் 14,000 பேர் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில் காவடிகள், பாத ஊர்வலம், வேல் குத்துவது போன்றவை அனுமதிக்கப்படவில்லை.