மருத்துவமனைகளிலும் தாதிமை இல்லங்களிலும் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சென்று பார்ப்பதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வாரங்களாக ஓமிக்ரான் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சுகாதாரப் பரா
மரிப்புத் துறைக்கு நெருக்கடி ஏற்
படாமல் இருக்கவும் மூத்தோரைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
இந்தத் தற்காலிகத் தடை வரும் திங்கட்கிழமையிலிருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
"மருத்துவமனைகளிலும் தாதிமை இல்லங்களிலும் தங்கி சிகிச்சை பெறும் தங்கள் அன்புக்குரியவர்களை நேரில் சென்று பார்க்க விழையும் குடும்பத்தாருக்கு இந்த நடவடிக்கை சிரமத்தை ஏற்
படுத்தும். இது எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. இருப்பினும், பொதுமக்களின் சுகாதாரத்தையும் நலனையும் காக்க இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது," என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சு கள்நிலை பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
சமூக அளவில் நிலைமை மேம்பட்டதும் இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவர் என்று அவர் கூறினார்.
நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 1,001 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 952 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. 49 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
வாராந்திரத் தொற்று அதி
கரிப்பு விகிதமும் நேற்று முன்
தினம் 2.17ஆக அதிகரித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு சிங்கப்பூரின் வாராந்திரத் தொற்று அதிகரிப்பு விகிதம் 2க்கு மேல் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை. சூழ்நிலையைப் பொறுத்து நோயாளிகளை நேரில் சென்று பார்க்க மருத்துவமனைகளும் தாதிமை இல்லங்களும் சிலருக்கு அனுமதி வழங்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது. உதாரணத்துக்கு, கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், மகப்பேறு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் போன்றோரை நேரில் சென்று பார்க்க அவரது குடும்பத்தார் அனுமதிக்கப்படலாம். அத்தகைய நோயாளி களைக் காண ஒருநாளுக்கு ஒருவர் மட்டுமே செல்ல முடியும்.
நோயாளிகளை நேரில் சென்று பார்க்க தற்காலிகத் தடை நடப்பில் இருக்கும்போது தங்கள் அன்புக்குரியவர்களுடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்படும்.
தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு போன்ற தொடர்பு முறைக்கு ஏற்பாடு செய்யப்படும். மருத்துவமனைக்குச் செல்லும் வருகையாளர்கள் அதிகப் பாதுகாப்பு வழங்கக்கூடிய முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். அவர்கள் மருத்துவ முகக்கவசம் அணியலாம். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம் அணிந்திருந்தால் அது ஈரடுக்குத் துணி கொண்டதாக இருக்க வேண்டும்.
மருத்துவமனை அறையில் இருக்கும்போது வருகையாளர்கள் உணவு சாப்பிடவோ தண்ணீர் அருந்தவோ கூடாது. நோயாளி
களுக்கான கழிவறைகளை அவர்கள் பயன்படுத்தக்கூடாது. நோயாளிகளின் படுக்கையில் அமர்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் முன் வருகையாளர்கள் அனை
வரும் ஏஆர்டி பரிசோதனை செய்து கொண்டு தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.